இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரும் பலதரப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள உள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்வதுடன் சீனா தொடர்பில் இருதரப்பினருக்கும் எழுந்துவரும் கவலைகளுக்கிடையே பிலிப்பீன்சிடமிருந்து கூடுதல் ராணுவ ஒத்துழைப்பையும் அமெரிக்கா எதிர்பார்ப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்டகால நட்புறவு நாடுகளான பிலிப்பீன்சும் அமெரிக்காவும் அதை மறுஉறுதிப்படுத்திக்கொள்ள திரு மார்கோஸ் நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
பிலிப்பீன்சின் உத்திபூர்வ முக்கியத்துவத்தைக் குறைத்து எடைபோட்டுவிட முடியாது என்று ராய்ட்டர்சிடம் பேசிய மூத்த அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வெறும் பாதுகாப்புக்கும் அப்பாற்பட்டது என்று கூறியிருந்தார்.
சீனாவுடனும் அமெரிக்காவுடனும் திரு மார்கோஸ் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள முயன்றபோதும் சீனாவின் அரசதந்திர அணுகுமுறை எரிச்சலூட்டும் வகையில் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
தைவானைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா இறங்கினால் அதற்கு எதிராக ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கு பிலிப்பீன்ஸ் சிறந்ததொரு இடமாக விளங்குவதை அமெரிக்கா கருதுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘அச்சுறுத்தலை நிறுத்துக’
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் ‘பாதுகாப்பற்ற, அச்சுறுத்தல் விடுக்கும் நடத்தையை’ நிறுத்துமாறு நேற்று முன்தினம் சீனாவிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
பிலிப்பீன்சின் சுற்றுக்காவல் கப்பல் ஒன்றை சீனாவின் கடற்கரைக் காவல் படை வழிமறித்ததுடன் இரண்டும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படவிருந்த சம்பவம் நடந்ததை அடுத்து, அமெரிக்கா இவ்வாறு கோரியுள்ளது.
இதையடுத்து பிலிப்பீன்ஸ் படகுகள் சீனாவின் அனுமதியின்றி ஊடுருவியுள்ளன என்றும் இது ‘திட்டமிடப்பட்ட அச்சுறுத்தும் ஒரு செயல்’ என்றும் சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.