பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டு சற்று மெதுவடைந்தாலும் ஒரேயடியாக வீழ்ச்சி அடையும் நிலையை சிங்கப்பூர் தவிர்த்துவிடும் என்று பிரதமர் லீ சியன் லூங் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும் இவ்வாண்டின் பிற்பாதியில் அது மிதமாகலாம். இதற்கிடையே, வேலையின்மை விகிதம் குறைவாக இருந்துவருவதுடன் ஆள் குறைப்பு எண்ணிக்கையும் சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்று திரு லீ நேற்று குறிப்பிட்டார்.
“ஆக மொத்தத்தில் நம் உடனடிப் பொருளியல் வாய்ப்புகள் குறித்து நாம் எச்சரிக்கை கலந்த நம்பிக்கையுடன் இருக்கலாம்,” என்றார் அவர். கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவரும் நிலையில், பொருளியலும் தொடர்ந்து மீட்சி காண்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6% வளர்ச்சி கண்டது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளும் வேகமாக மீட்சி கண்டு வருகின்றன என்றார் அவர். பயணத்துறையும் விருந்தோம்பல் துறையும் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.
கொள்ளைநோய்க்கு முந்திய நிலையின் 80% பயணிகள் போக்குவரத்தை சாங்கி விமான நிலையம் தற்போது அடைந்துள்ளது. படிப்படியாக அனைத்துலக தொடர்புகள் பழைய நிலைக்குத் திரும்ப, இந்த விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவைகள், உணவு, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றின் விலை குறைவாக உயர்ந்துவந்துள்ள பின்னணியில் பணவீக்கம் பல மாதங்களாக உச்சத்தைத் தொட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் குறையத் தொடங்கியது.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஆண்டு அடிப்படையில் பதிவான பொருளியல் வளர்ச்சி 0.1%. அனைத்துலக அளவில் பொருளியல் மெதுவடையும் போக்கைக் கருத்தில்கொண்டு ஆய்வாளர்கள் தங்களின் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்தும் உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தன்னால் முடிந்த அளவு அரசாங்கம் செய்யும் என்றார் திரு லீ.
“எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கும் ஊழியர்களை படிப்படியான சம்பள உயர்வு முறைவழி மேம்படுத்துவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுவருகிறோம். திறன்சார்ந்த வர்த்தகங்களை நிபுணத்துவம் வாய்ந்தவையாக்கி வெற்றிக்குக் கூடுதல் பாதைகளை உருவாக்குவோம். அத்துடன் வாழ்க்கைத்தொழில் திட்டமிடுதல் தொடர்பில் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் ஆதரவை மேம்படுத்துவோம்,” என்றார்.
இந்த விவகாரங்கள் குறித்து ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் கலந்தாலோசித்து வருவதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
முத்தரப்புப் பங்காளிகள் எனக் குறிப்பிடப்படும் அரசாங்கம், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருந்தால் இத்தகைய முயற்சிகள் கைகூடிவரும் என்றார் அவர்.
ஊழியர்களுக்கான பயிற்சி, மேம்பாட்டுத் திட்டங்கள் நன்கு நடைபெற்று வருவதாகச் சுட்டிய திரு லீ, அவற்றால் பலரும் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடிவதாகச் சொன்னார்.
“ஊழியர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தித்திறன் மேம்படுவதுடன் திறனாளர்களையும் நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது,” என்றார் அவர்.
இருப்பினும் புவியியல்சார் அரசியல் நெருக்குதல்கள் நிறைந்த நிச்சயமற்ற அனைத்துலக சூழல் குறித்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலைநாடுகளில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் அபாயம் உண்டு என்றார். அனைத்துலக வர்த்தகமும் ஒத்துழைப்பும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதேவேளை வளர்ச்சிகண்டு வரும் தொழில்துறைகளும் புதிய தொழில்நுட்பங்களும் உலகநாடுகளின் பொருளியலுக்குத் தடங்கலாக இருக்கலாம்.
“இத்தகைய சூழல்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ளும் அதே நேரத்தில் மோசமாகப் பாதிக்கப்படுவோருக்கு உதவவும் முடிந்த அளவு செய்யவேண்டும்,” என்றார்.
“நாம் தொடர்ந்து செயல்படுவதும் உலகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதுமாக இருப்பதைப் பொறுத்து சிங்கப்பூரின் வளர்ச்சி உள்ளது. நமது தொழில்துறைகளைத் தொடர்ச்சியாக உருமாற்றிக்கொண்டு, தற்போதைய ஆற்றல்களை மேம்படுத்திக்கொண்டு, வளர்ச்சி வாய்ப்புகளை நோக்கியபடி புதிய ஆற்றல்களை உருவாக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.
“இதனால் தற்போது இருக்கும் வேலைகளில் தடங்கல் ஏற்பட்டாலும் எதிர்காலத்துக்கு ஏற்ப சிறந்த வாய்ப்புகளுடைய புதிய வேலைகளை நம்மால் உருவாக்க முடியும்,” என்றார் பிரதமர் லீ.