உலகில் கொரோனா கிருமி இன்னமும் ஒழிந்தபாடில்லை.அது மேலும் தொல்லை தரக்கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக அளவில் கடந்த 28 நாள்களில் 23,000க்கும் மேற்பட்ட மக்கள் மாண்டுவிட்டதாகவும் மூன்று மில்லியன் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தனக்குத் தகவல் கிடைத்து உள்ளதாக அந்த அமைப்பு கூறியது.
இப்போது பரிசோதனைகள் அவ்வளவாக நடத்தப்படுவதில்லை. இந்த நிலையிலும் அந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கிறது என்பதை அது சுட்டியது.
இன்னமும் அதிக மக்கள் மடிகிறார்கள். அதிக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நிறுவனத்தின் அவசரகால சுகாதார செயல்திட்டத்துறை இயக்குநர் மைக்கல் ரயன் கூறினார்.
இந்த நிறுவனத்தின் அவசரகாலக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும். அதன் அடுத்த கூட்டம் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடக்க உள்ளது. கொரோனா தொற்று அனைத்துலக அளவில் அபாய சங்கு ஊதும் அளவுக்குக் கூடிவிட்டதா என்பதை அது கூட்டத்தில் முடிவு செய்யும்.
“கொரானா கிருமியைத் துடைத்து ஒழிக்க முடியாது. சளிக்காய்ச்சலைப்போல் அப்போதைக்கு அப்போது அது தொல்லை கொடுக்கும். பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவர். மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு வரவேண்டும்,” என்று திரு ரயன் கூறினார்.