fontsize: 60% 70% 80% 90%

முக‌ப்பு

அதிபர் விருது பெற்ற ஆசிரியர்கள்

தொடக்கநிலை 6ம் வகுப்பில் படித்த அந்த மாணவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தார்.

இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்ததால் அடுத்த நாள் பள்ளி வர அந்த மாணவர் சோம்பல்படுவதை செங்காங் தொடக்கப் பள்ளியின் மாணவர் கட்டொழுங்குத் துறைக்குத் தலைவரான திரு தேவேந்திரசபை, அறிந்தார்.

அந்த மாணவருடன் பேசி, அவரின் நேர ஒழங்கை சரிப்படுத்தினார். அவர் பள்ளிக்கு வராவிட்டால், நேராக மாணவரின் வீட்டுக்குச் சென்று அழைத்து வருவார்.

“உயர்நிலை ஒன்றில் இப்போது பயிலும் அந்த மாணவர் ஆசிரியர் தினத்தன்று வாழ்த்துச் சொன்னபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் இந்த ஆண்டின் முன்னுதாராண ஆசிரியருக்கான அதிபர் விருதை வென்ற நான்கு ஆசிரியர்களில் ஒருவரான திரு தேவேந்திரசபை.

பழக்கவழக்க அல்லது சமூகப் பிரச்னைகள் உள்ள மாணவர்களுக்காக நேரம் ஒதுக்குவதோடு, சமூகவிரோதப் போக்கை வெளிப்படுத்தும் மாணவர் களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்ட தனது சக ஆசிரியர்களையும் இவர் ஊக்குவிக்கிறார்.

ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரியும் 45 வயது தேவேந்திரசபை, பள்ளியில் உடற்பயிற்சிக் கல்விக்கும் பொறுப்பாளாராக உள்ளார்.

இவரின் திட்டங்களும் முயற்சிகளும் மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதிபர் விருதையும் பெற்றுத் தந்துள்ளன.

“இந்த விருது எனது பள்ளிக்கும் திட்டங்களில் ஒன்றுபட்டு செயலாற்றும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த விருது,” என்று பெருமையுடன் கூறினார் திரு தேவேந்திரசபை.

ரீஜென்ட் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி மோகனா ஈஸ்வரன், டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் குமாரி தே வான், சிஎச்ஐஜே (கெலோக்) ஆசிரியர் திருவாட்டி எமிலின் சூன், இந்த ஆண்டின் விருதை பெற்ற மற்ற மூவர்.

முன்னுதாரண ஆசிரியர் விருதுக்கு இந்த ஆண்டு சாதனை அளவாக 9,700க்கும் மேற்பட்ட நியமனங்களை பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனுப்பியிருந்ததாக கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

டிசம்பரில் விலகல் இல்லை: சாமிவேலு

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, டிசம்பரில் தான் பதவி விலகப்போவதாகப் பேச்சு அடிபடுவதை மறுத்துள்ளார்.

அத்தகைய பேச்சு சிலருடைய கற்பனையே என்று அவர் சொன்னார்.

“விலகப் போகிறேன் என்று நான் சொன்னேன். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் நான் குறித்திருக்கும் தேதியில்தான் விலக முடியும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

சிரம்பானில் நடந்த ஒரு புரிந்துணர்வு கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டத்தோ சாமிவேலு, பதவி விலகல் பற்றி கருத்து தெரிவித்தார்.

சாமிவேலு டிசம்பரில் பதவி விலகப் போவதாக தனக்கு அணுக்கமானவர்களிடம் தெரிவித்து இருக்கிறார் எனத் தெரிகிறது என்று ஆங்கில மொழி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

பதவி விலக இருக்கும் சாமிவேலுவுக்கு பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

அதுபற்றி கருத்துத் தெரிவித்த சாமிவேலு, தான் குறித்துள்ள நாளன்று பதவியில் இருந்து விலகப் போவதாகச் சொன்னார்.
“சிலருக்கு என்னைப் பிடிக்க வில்லை. நான் இன்றே விலக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

“நான் விரும்பும்போது விலகிடுவேன்,” என்று சாமிவேலு சொன்னார்.

தனது பதவி காலம் 2012ல் முடிவடைவதாகவும் அப்போது பதவியில் இருந்து தான் விலக இருப்பதாகவும் சாமிவேலு முன்பு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூது: விளையாட்டாளர்களுக்கு எதிராகத் தேசத் துரோக வழக்கு தாக்கல்

விஸ்வரூபம் எடுத்து இருக்கும் சூதாட்ட விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உருக்குலைத்து விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் முகமது ஆசிப், முகமது ஆமிர், டெஸ்ட் அணித் தலைவர் சல்மான் பட், விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உள்பட 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் கிளம்பி இருக்கிறது.

இதன் தொடர்பில் சூதாட்டத் தரகர் மஷார் மஜீத் என்பவர் கைதாகி பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.

சூதாட்டப் பிரச்சினை குறித்து பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்திய விவகாரம் தொடர்பாக லண்டனைச் சேர்ந்த 35 வயது பெண் உள்பட மேலும் மூவர் கைதாகி இருக்கிறார்கள்.

இதற்கிடையே சூதாட்டத்தில் சிக்கியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூர் உயர்நீதி மன்றத்தில் இஸ்தியாக் அகம்மது என்ற வழக்கறிஞர் தொடுத்த தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு ஏற்கப் பட்டுள்ளது.

தேச துரோக குற்றச் சாட்டில் அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்பட வழிவகை உண்டு.

உள்துறை அமைச்சு பிரிவுகளில் தலைமைத்துவ மாற்றங்கள்

குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையத்தின் ஆணையாளர் திரு எரிக் டான் ச்சொங் சியன்,
1 அக்டோபர் 2010 தேதியிலிருந்து ஊழல் விசாரணை இலாகாவின் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.

ஊழல் விசாரணை இலாகாவின் தற்போதைய இயக்குநர் திரு சோ கீ ஹியன் தேசிய வளர்ச்சி அமைச்சின் எஸ்டேட் ஏஜன்சீஸ் மன்றத்தின் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுவார். எஸ்டேட் ஏஜன்சீஸ் மன்றம் இவ்வாண்டு இறுதியில் அமைக்கப்படும்.
திரு எரிக் டான் 1 செப்டம்பர் 2010 அன்று ஆணையாளர் பதவியிலிருந்து விலகுவார்.

திரு சோ கீ ஹியன் 2005ம் ஆண்டு ஊழல் விசாரணை இலாகாவின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

அவரது தலைமைத்துவத்தின்கீழ், தலையெடுத்துவரும் சவால்களைக் கையாளக்கூடிய புதிய ஆற்றல்களை இலாகா மேம்படுத்தியதோடு, அனைத்துலக ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பங்காற்றியது.

சென்ற ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு ஊழல் தடுப்பு மற்றும் வெளிப்படைப்போக்கு வல்லுநர்கள் பணிக் குழுவுக்கு அவர் தலைமை ஏற்றிருந்தார்.

பொதுத் துறையையும் வர்த்தகச் சமூகத்தையும் சென்றடையும் முயற்சிகளையும் இலாகா விரிவுபடுத்தியது.

குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் தற்போதைய துணை ஆணையாளரான 51 வயது திரு கிளாரன்ஸ் இயோ கெக் லியோங், 1 செப்டம்பர் 2010 முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்பார்.

குடியேறிகளால் சிங்கப்பூருக்கு நன்மையே - பிரதமர் லீ

- வீ. பழனிச்சாமி -

தற்போதுள்ள குடிநுழைவுக் கொள்கையால் பல இன மக்களைக் கொண்டுள்ள தனது மக்கள் தொகைக்குப் பிரச்சினைகள் கொடுக்க சிங்கப்பூர் ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியைத் தாம் ஆற்றிய மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கில உரைகளில்
திரு லீ வலியுறுத்திக் கூறினார்.

வெளிநாட்டுத் திறனாளர்களை வரவேற்பதற்கான நன்மைகளைப் பட்டியலிட்ட பிரதமர், முன்பு தாம் கூறியதுபோல மேலும் 100,000 வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படமாட்டார்கள் என்றும் இப்போதைய சூழ்நிலையில் சுமார் 80,000 ஊழியர்கள் தேவைப்படக் கூடும் என்றும் விளக்கினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலாசார மையத்தில் நேற்று மாலை பிரதமர் லீ, தமது வருடாந்திர தேசிய தினப் பேருரையை நிகழ்த்தினார்.

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றும் மிக முக்கிய உரையாக இந்தப் பேருரை கருதப்படுகிறது. கடந்த ஓர் ஆண்டில் நாடு எவ்வாறு செய்தது? அடுத்த ஓராண்டுக்கு அது சந்திக்கும் சவால்கள் என்ன போன்றவற்றைப் பிரதமர் இந்தப் பேருரையின் மூலம் விளக்கினார்.
சிங்கப்பூரின் பொருளியல் இப்போது மேம்பட்டிருப்பதால், இப்போது அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள்.

அவர்கள் மூலம் இன்னும் அதிகமான புதிய வேலைகள் உருவாக்கப்படலாம் என்றும் திரு லீ சொன்னார்.

குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய சம்மதிக்கும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ஊழியர்களால் உள்ளூர் ஊழியர்கள் கடும் போட்டியைச் சந்திக்கலாம்.

வெளிநாட்டு ஊழியர்களைத் தவிர வெளிநாட்டுத் திறனாளர்களும் சிங்கப்பூருக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் நிரந்தரவாசிகளாகவோ குடிமக்களாகவோ ஆகி, நமது மக்கள் தொகை மேம்பாட்டுக்கு உதவலாம் என்றார்
திரு லீ.
ஆக, சிங்கப்பூர் குடிமக்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் ‘குடியேறிகள்’ என்று வகைப்படுத்தப் படுகின்றனர்.
பொருளியலுக்கு உதவும் அதே வேளையில் சமூகத்துடன் ஒன்றிணையும் அனைத்து இனங்களைச் சேர்ந்த திறனாளர்களைச் சிங்கப்பூர் வரவேற்கிறது என்றும் பிரதமர் சொன்னார்.

பிரதமர் நேற்றைய உரையில் கல்வி, வீடமைப்பு, தேசிய சேவை போக்குவரத்து, சிங்கப்பூர் உணர்வு போன்ற அம்சங்கள் பற்றியும் பேசினார்.

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன்தான் கூட்டணி - ப.சிதம்பரம்

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி என்பது கனவாகவே போய்விட்டது.

“மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வேண்டும் என்பதே எனது நாற்பதாண்டு கால ஆசை,” என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

நேற்று கோயம்புத்தூர் சிறைச்சாலை மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ப.சிதம்பரம், இன்றைக்குத் தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி அன்றைக்கு அமைத்த அடித்தளம்தான் என்று கூறினார்.

எனவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும்.
இந்தியாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என்ற ஏக்கமும் ஆதங்கமும் எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு இருக்கவே செய்கிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான் நிலவுகிறது.
தமிழகத்திலும் கூட்டணி தான் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தாலும், வெற்றி பெறும் கூட்டணி காங்கிரஸ் கூட்டணியாகவே இருக்கும்.
அடுத்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ப.சிதம்பரம்.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் போக்கு தமிழக அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதிமுக அல்லது தேமுதிக போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்து பெரிய அரசியல் திருப்பத்திற்கு வழி வகுக்குமோ என்று அரசியல் நோக்கர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், திமுகவுடன் கூட்டு சேரும் பாமகவின் முயற்சி தோற்றதால், பாமக தன்னிச்சையாகவே போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நோயாளியுடன் பேசிக்கொண்டே மூளை அறுவை சிகிச்சை

ஹூப்ளி
அறுவை சிகிச்சை என்றாலே அச்சம் இருக்கவே செய்யும். ஆனால் பெங்களூரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், நோயாளி விழித்திருக்கச் செய்து அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மிதுன் சத்தூர்.

இவரிடம் சிகிச்சை பெற வந்த நாற்பது வயதான ஷன்முக் கல்பர்கி என்பவருக்கு மூளைக்கு மிக அருகில் கட்டி ஒன்று வளர்ந்திருந்தது.

மனிதனின் பேச்சு, வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றைக் கையாள்வது மூளையின் இடப்புறம்தான். ஷன்முக்கிற்கு மூளையின் இடப்புறத்தில்தான் அக்கட்டி வளர்ந்திருந்தது. எனவே இக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யத் தீர்மானித்தார் மிதுன் சத்தூர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஷன்முக் கல்பர்கிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது ஷன்முக்கிற்கு மயக்க மருந்து எதுவும் செலுத்தப் படவில்லை. அறுவை சிகிச்சை நடந்து முடியும் வரையில் மருத்துவர் களுடன் பேசியபடியே இருந்தார் ஷன்முக்.

“மூளையின் இடப்புறம் பாதிக்கப்பட்டால் ஒருவர் பேச்சுத்திறனை இழக்க நேரிடலாம். சில சமயங்களில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க இயலாது போகவும் நேரிடும்.

சிகிச்சைக்குப் பின்னர் இத்தகைய சிக்கல்கள் ஏற்பட்டால் குணப் படுத்துவது கடினம். அதனால்தான் சிகிச்சையின்போது ஷன்முக்குடன் பேசியபடி இருந்தோம். அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதைச் சரி செய்யவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

“ஷன் முக் தற்போது நலமாக இருக்கிறார்,” என்றார் டாக்டர் மிதுன்.

தேர்தல்: கருணாநிதியின் ‘எல்லாம் சலுகை மயம்’

தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி கைவசம் இருந்தாலும் அதைவிட பெரிய ஆயுதமாக சலுகை, இலவசத்தைக் கையில் எடுக்கிறார் கருணாநிதி.

ஒரு ரூபாய் அரிசி முதல் கோடானுகோடி திட்டங்கள் வரை வாக்காளர்களே திக்கு முக்காடிப் போகும் அளவுக்கு இலவசங்களும் ஊக்குவிப்புகளும் கோடி கோடி மதிப்புக்கு திட்டங்களும் பரபரப்பாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அண்மைய நாட்களில் ஏராள தாராள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
*இரண்டு லட்சம் அரசு ஊழியர்களுக்குரிய சம்பள தொகையில் 223 கோடி ரூபாய் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு இலவச மோட்டார் திட்டம் 2,700 கோடி ரூபாய் செலவில் அமலாகிறது.
*சாராயக்கடையில் வேலை பார்க்கும் 30,000 ஊழியருக்கு மாதம் ரூ 500 கூட்டப் பட்டுள்ளது. *இலவச தொலைக் காட்சித் திட்டம் முழுவேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலொ அரிசி வழங்கும் திட்டம், வரும் டிசம்பருக்குள் எல்லாருக்கும் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்புடன் அடுப்புகள் வழங்கும் திட்டம்;
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம், வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம் எல்லாம் சுண்டிவிடப் பட்டுள்ளன.

இவை ஒருபுறம் இருக்க, இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்குக் குறித்த காலத்தில் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதிலும் திமுக முதல்வர் படுவேகமாக இருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் மாநாடு கூட்டப்பட்டு அவர்களுக்குப் பற்பல கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. "அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் 300,000 கான்கிரீட் வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும்'' என்பது அந்தக் கட்டளைகளில் ஒன்று.

இந்த ஆண்டில் 1.02 லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும். இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் மேலும் 153 கோடி ரூபாய் கூட்டப்பட்டுள்ளது.

போலிஸ் மாநாடும் கூட்டப் பட்டு குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி போலிஸ் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் துணை முதல்வர் ஸ்டாலின், பிரமாண்ட திட்டம் ஒன்றை நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகருக்கு வெளியே அமையும் 1082 கோடி ரூபாய் வெளிவட்ட சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இன்று பிரதமரின் தேசிய நாள் பேருரை

இவ்வாண்டின் தேசிய தினப் பேருரையில் பிரதமர் லீ சியன் லூங் இன்று உரை ஆற்றும்போது, சிங்கப்பூர் பொருளியல், நமது கல்வித் திட்டம், குடிநுழைவுக் கொள்கை, சிங்கப்பூர் உணர்வு ஆகிய நான்கு அம்சங்களில் கவனம் செலுத்துவார் என்று பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வலுவாக்கும் வகையில், இந்த அம்சங்களில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்றும் இவற்றின் கொள்கைகள் எவ்வாறு மாற்றி அமைக்கப் பட்டு, மேம்படுத்தப்படலாம் என்றும் பிரதமர் லீ விளக்குவார்.

பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேருரையை இன்று மாலை 6.45 மணிக்கு நிகழ்த்துவார்.
முதலில் திரு லீ மலாய் மொழியில் பேசிய பிறகு மாண்டரின் மொழியில் உரையாற்றுவார். அவரது ஆங்கில உரை இரவு 8.00 மணிக்குத் தொடங்கும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் நடைபெறும் தேசிய தினப் பேருரையை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளில் மக்கள் நேரடியாகப் பார்க்கலாம்.
உள்ளூர் வானொலி ஒலிவழிகளில் நேரடியாகக் கேட்கலாம்.

இணையம் வழியாகப் பார்க்க விரும்புவோர் www.pmo.gov.sg அல்லது www.reach.gov.sg/ndrsg
ஆகிய இணையத் தளங்களுக்குச் சென்று பார்க்கலாம்.

எழுதிப் பழகியதைச் சொல்லிப் பகிர்ந்த மாணவர்கள்

கல்வி அமைச்சின் பாடத் திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் தமிழ் மொழிப் பகுதி ஏற்பாட்டில் சிறுகதை, கட்டுரை எழுதும் போட்டிகள் சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டன. எழுத்து ஆற்றலை வளர்ப்பது நோக்கம்.

உயர்நிலை மேல் வகுப்பு மாணவர்கள் சிறுகதை எழுத, உயர்நிலை கீழ் வகுப்பு மாணவர்கள் கட்டுரை எழுதி பரிசு வென்றனர்.

இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களுடைய எழுத்து அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதற்காகவே கலந்துரையாடல் இடம்பெற்றது.

இரு பிரிவுகளிலும் வென்ற மாணவர்கள் நால்வர் மற்ற மாணவர்களுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838