சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் ஏழு அறைகள் தரைமட்டமானது, ஏழு அறைகள் சேதமடைந்தன.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான அந்தப் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு, வெடிவிபத்து நிகழ்ந்தது. விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்ததால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருந்தது.
சம்பவ இடத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஜனா, பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி, ஏடிஎஸ்பி சூர்யமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சுப்பையா, பவித்ரா, முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.