சென்னை: அமுல் நிறுவனம் தமிழகத்தில் இரண்டு மாதங்களில், பால் விற்பனையைத் துவக்க திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்று பால்வளத்துறை கூறியுள்ளது.
தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பாலுடன் 230க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் வாயிலாகவும், பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருள்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்குப் போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை.
பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருள்களை, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை 2023ல் துவங்கியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமுல் நிறுவனம் பால் விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதற்கான கிடங்கு, செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்றும் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்றும் பால்வளத்துறை கூறியுள்ளது.