சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்காளர்கள் சிலருக்கு மாலை ஆறு மணிக்கு மேல் வந்த தொலைபேசி அழைப்பால் சென்னையில் பரபரப்பு நிலவியது.
அந்த மர்மத் தொலைபேசி அழைப்பில் ஒலித்த ஒரு பெண்ணின் குரல், தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியது. மேலும், வேட்பாளர்களின் பெயர்களையும் அவர்களுக்கான எண்ணையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது.
அதன் பின்னர் குறிப்பிட்ட பொத்தானை அழுத்துமாறு குறிப்பிடப்பட்டதால் பலரும் குழப்பமும் அச்சமும் அடைந்தனர்.
இது மோசடி வேலையாக இருக்கக்கூடும் எனக் கருதி, அழைப்பை பாதியிலேயே துண்டித்ததாக சிலர் கூறினர்.
இவ்வாறு விவரங்களைக் கேட்பது சட்டப்படி தவறு என்றும் சில தனியார் அமைப்புகள் இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.