ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வெள்ளிக்கிழமை அன்று ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடந்தது. 69 விழுக்காடு வாக்கு பதிவான நிலையில் நகர் பகுதியை விட கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதேபோல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து உற்சாகத்துடன் வாக்களித்துச் சென்றனர்.
இளம் வாக்காளர்களை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் வயதானவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததைக் காண முடிந்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிகரைப்பட்டியைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். வெள்ளிக்கிழமை தேர்தல் நாள் என்பதால் தான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறிய மூதாட்டி வாக்கு மையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தவே, உறவினர்களும் அவரை மோட்டார் சைக்கிளின் முன்புறம் அமர வைத்து வாக்கு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வயது மூப்பு காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் வாக்களிக்க அனுமதித்தனர். இதையடுத்து 95 வயது மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையிலும் தனது வாக்கைச் செலுத்தினார்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் நடக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டிகள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். செட்டியார்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி வாக்குச்சாவடிக்கு ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்த 92 வயதான மூதாட்டி ருக்மணி என்பவரும் வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1962ஆம் ஆண்டு முதல் தவறாமல் வாக்களித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 92. வயது முதிர்ச்சியால் பாதிப்பு இருந்தாலும் நல்ல அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளேன் என்றார்.