சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இந்தத் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றார்.
மேலும், கர்நாடக மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றும் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்துவிடப்பட்டு வருகிறது என்றார்.
“இதனால் 2021-22ஆம் ஆண்டில் 46.2 லட்சம் டன், 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் என்ற அளவில் காவிரி பாசனப் பகுதியில் நெல் உற்பத்தி செய்து மிகப்பெரிய சாதனை செய்தோம்.
“இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது. உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக மேட்டூர் அணையை ஜூன் 12 அன்று திறந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை இந்த மாதத்தில் வழங்கவில்லை,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு சட்ட ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அவர், தமிழக அரசுப் பிரதிநிதிகள் புதுடெல்லி சென்று மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதையும் குறிப்பிட்டார்.
“தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர் தேவைக்கும் அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்கு பெற்றுத் தருவதில், எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம்.
“மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்,” என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து அவர் தாக்கல் செய்த தீர்மானத்தை ஆதரித்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.
அதன் பின்னர் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.