தோஹா: இவ்வாண்டு பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில், அதில் காற்பந்தாட்டத்தில் போட்டியிட ஜப்பானும் உஸ்பெகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன.
கத்தாரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) நடந்த 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளில் உஸ்பெகிஸ்தான் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனீசியாவையும், அதே கோல் கணக்கில் ஜப்பான், ஈராக்கையும் வீழ்த்தின.
இதனையடுத்து, இரு அணிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதிபெற்றன. இவ்விரு அணிகளும் மோதும் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து எல்லா ஒலிம்பிக் போட்டிகளிலும் ஜப்பான் காற்பந்து அணி விளையாடியுள்ளது.
ஆசியக் கண்டத்திலிருந்து மூன்று அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், அந்த மூன்றாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இந்தோனீசியாவும் ஈராக்கும் வியாழக்கிழமையன்று மோதவுள்ளன.