தர்மசாலா: உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நெருங்கியுள்ள நிலையில், ‘ஆல்ரவுண்டர்’ ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் ஜடேஜா.
சென்னை அணியில் அதிகபட்சமாக 43 ஓட்டங்களைக் குவித்த ஜடேஜா, பந்துவீச்சிலும் மிளிர்ந்தார். அவர் பஞ்சாப் அணி வீரர்கள் மூவரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனையடுத்து, அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது.
பஞ்சாப் அணி அந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்குமுன் அவ்விரு அணிகள் மோதிய ஐந்து முறையும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், சென்னை அணியின் பந்துவீச்சில் நிலைகுலைந்த பஞ்சாப் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், அவ்வணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் சென்னை அணி மூன்றாம் இடத்திலும் பஞ்சாப் அணி எட்டாம் இடத்திலும் இருந்தன.