மும்பை: ஐபிஎல் 2024 கிரிக்கெட் பருவம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
வெள்ளிக்கிழமை (மே 3) இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி மும்பையின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தவிந்த கோல்கத்தா அணியை வெங்கடேஷ் ஐயரும் மணீஷ் பாண்டேவும் பொறுப்பாக விளையாடி மீட்டனர்.
வெங்கடேஷ் 70 ஓட்டங்களும் மணீஷ் 42 ஓட்டங்களும் குவித்தனர். இறுதியில் கோல்கத்தா 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணியும் பந்தடிப்பில் திணறியது. ரோகித் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா என முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் தனி ஆளாக சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடினார். இருப்பினும், அவர் 56 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில் மும்பை அணி 145 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அசத்தலாகப் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் கோல்கத்தா வெற்றிபெற்றுள்ளது.
இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் மும்பை உள்ளது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் மும்பை வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம்தான்.
பும்ராவுக்கு ஓய்வு தரலாம்
இந்நிலையில், ஜஸ்பிரீத் பும்ராவுக்கு மும்பை அணி ஓய்வு தரலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்திய அணி டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளது அதனால் பும்ராவுக்கு உரிய ஓய்வு அளிப்பது அவசியம் என்றார் அவர்.