லாவ்சானே (சுவிட்சர்லாந்து): காற்பந்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உலகக் கிண்ணத் தகுதியாட்டம் நடைபெறுவதற்கு முன்பு ரசிகர்கள் மோதிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திரு இன்ஃபன்டினோ அவ்வாறு சொன்னார்.
அச்சம்பவம் பிரேசிலின் பிரபல மராக்கானா விளையாட்டரங்கில் நிகழ்ந்தது. இரு அணிகளின் தேசிய கீதங்கள் ஒலித்தபோது ரசிகர்கள் மோதிக்கொண்டனர்.
அதனையடுத்து ஆட்டம் அரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. ஓர் அர்ஜென்டினா ரசிகர் முகத்தில் ரத்தத்துடன் காணப்பட்டார்.
“காற்பந்தில் திடலிலும் சரி வெளியேயும் சரி இதுபோன்ற வன்முறைக்கு இடம் கிடையாது,” என்று இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார் திரு இன்ஃபன்டினோ.
“காற்பந்து விளையாடி ரசிக்கப்படவேண்டும். அதற்கு விளையாட்டாளர்கள், ரசிகர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் அனைவரும் விதிவிலக்கின்றி பாதுகாக்கப்படவேண்டும். எல்லா சூழல்களிலும் இதை உறுதிப்படுத்தவேண்டும் என்று நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குரல் கொடுக்கிறேன்,” என்று இன்ஃபன்டினோ கூறினார்.
ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. முதன்முறையாக மராக்கானா விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதியாட்டத்தில் பிரேசில் தோல்வியடைந்தது.