லக்னோ: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் அதிரடியான பந்துவீச்சால் இங்கிலாந்தை ஊதித் தள்ளியது இந்தியா.
பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை முதலில் பந்தடிக்க வைத்தது. இந்தியா ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
நட்சத்திர பந்தடிப்பாளர் விராத் கோஹ்லி ஓட்டம் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். ஆனால் அணித் தலைவர் ரோகித் சர்மா 87 ஓட்டங்களும் சூரியகுமார் யாதவ் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் இதுவரை அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ள ஒரே அணி என்ற பெருமையை இந்தியா இழந்துவிடக்கூடும் என்ற அச்சம் நிலவியது. அதேவேளை, ஒன்றைத் தவிர எல்லா ஆட்டங்களிலும் தோல்வியடைந்த உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரக்கூடும் என்ற உணர்வு தலைதூக்கியது.
ஆனால் சுமாரான பந்தடிப்புக்கு ஈடுகட்டும் வகையில் பந்துவீச்சில் வெளுத்துக்கட்டியது இந்தியா. இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிகண்டது இந்தியா.
இந்தியாவின் முகம்மது ஷாமி நான்கு விக்கெட்டுகளைத் தூக்கினார். ஜஸ்பிரிட் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வெளியேற்றினார்.
இவர்களோடு குல்திப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வெளியேற்றினர்.
முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளரான வசிம் அக்ரம் பும்ராவின் அபார விளையாட்டைப் பாராட்டினார்.
“பும்ராதான் தற்போது உலகளவில் ஆகச் சிறந்த பந்து வீச்சாளர். அவரே முன்னணி வகிக்கிறார். அவர் விளையாடும் விதம், பந்தைக் கட்டுப்படுத்தும் விதம், பந்துவீசும் வேகம், பந்துவீச்சு உத்திகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர் ஒரு முழுமையான பந்துவீச்சாளர் எனச் சொல்லலாம். அவர் விளையாடுவதைக் காண்பதே விருந்து,” என்றார் அக்ரம்.
சவாலான திடலிலும் பருவநிலையிலும் பும்ரா பந்தை அபாரமாக வீசியதைப் பாராட்டிப் பேசினார் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா-உல்-ஹாக்.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து இதற்கு முன்பு இத்தனை ஆட்டங்களில் தோல்வியடைந்ததில்லை.
நடப்பு வெற்றியாளரான இங்கிலாந்திடமிருந்து கிண்ணத்தைப் பறிக்கும் வெறி இந்தியாவிடம் காணப்பட்டதாக பிபிசி ஊடகத்தில் கூறப்பட்டது. இங்கிலாந்தின் பொற்காலம் இப்போது இந்தியாவிடம் செல்லும் அறிகுறிகள் தென்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
தான் ஏற்று நடத்தும் போட்டியில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றியடைந்துள்ளது. முதல் சுற்றில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது இந்தியா.
இங்கிலாந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.