தர்மசாலா: இந்தியாவில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியை சற்று தடுமாற்றத்துடன் தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் மிரட்டல் விடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடி வருகிறது.
சனிக்கிழமையன்று தர்மசாலா நகரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ஓட்டங்களை விளாசியது. நியூசிலாந்தின் வெற்றி இலக்கு 389ஆக இருந்தது.
எனினும், விட்டுக்கொடுக்காமல் ஆடிய நியூசிலாந்து, ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 383 ஓட்டங்களைக் குவித்தது.
ஆட்டத்தில் வெற்றியடைய நியூசிலாந்துக்குக் கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கூடுதலாக ஆறே ஓட்டங்கள் எடுத்திருந்தால் உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை எந்த அணியும் அடையாத வெற்றி இலக்கை அடைந்த பெருமை நியூசிலாந்துக்குக் கிடைத்திருக்கும்.
ஆனால் பெரும் சவாலை எதிர்கொண்டு வெற்றியைத் தன்வசப்படுத்திக்கொண்டது ஆஸ்திரேலியா.
ஆட்டத்தில் நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி பந்தடிப்பாளரான ரச்சின் ரவீந்திரா சதமடித்தார். 116 ஓட்டங்களைக் குவித்தார் ரவீந்திரா.
ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் சதமடித்தார். ஹெட் 109 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில் ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்தது. முதல் சுற்றில் அடுத்தடுத்து நான்கு ஆட்டங்களில் வென்றதுடன் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் விளிம்பில் உள்ளது.
ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடத் தொடங்கிவிட்டதாக அதன் முன்னாள் அணித் தலைவர் ஏரன் ஃபிஞ்ச் பிபிசி ஸ்போர்ட் ஊடகத்திடம் தெரிவித்தார்.
“தங்களின் விளையாட்டிலும் அணியின் மற்ற வீரர்களின் விளையாட்டிலும் அணியினருக்கு இருக்கும் நம்பிக்கை வெளிப்படுகிறது,” என்றார் ஃபிஞ்ச்.