புதுடெல்லி: ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றுள்ளது தென்னாப்பிரிக்கா.
புதுடெல்லியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்களைக் குவித்தது. ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஓர் ஆட்டத்தில் இத்தனை ஓட்டங்களை எடுத்ததில்லை.
அதோடு, தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்தார். போட்டியின் வரலாற்றில் ஆக வேகமாக சதமடித்தவர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார்.
மொத்தமாக 54 பந்துகளில் 106 ஓட்டங்களைக் குவித்த பிறகு அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிள் ரேசி வேன் டர் டூசனும் சதமடித்தார். 110 பந்துகளில் 108 ஓட்டங்களை எடுத்த பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார்.
பிறகு பந்தடித்த இலங்கை, 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை எடுத்தது.
தென்னாப்பிரிக்கா வரலாறு காணாத அளவில் ஓட்டங்களைக் குவித்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடியது இலங்கை. 42 பந்துகளில் 76 ஓட்டங்களைக் குவித்தார் குசால் மெண்டிஸ். அவர் எடுத்த ஓட்டங்களில் எட்டு சிக்சர்களும் அடங்கும்.
சாரித் அசாலெங்கா 65 பந்துகளில் 79 ஓட்டங்களை எடுத்தார். அணித் தலைவர் டாசுன் ஷனக்கா 62 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்தார்.
எனினும், அபாரமாகப் பந்தடித்திருந்த தென்னாப்பிரிக்காவை இலங்கையால் சாய்க்க முடியவில்லை. இறுதியில் இலங்கை 326 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.