அகமதாபாத்: முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டெவொன் கான்வே இருவரும் தங்களின் முதல் ஆட்டத்திலேயே சதமடித்துள்ளனர்.
இந்த ஆட்டம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இரண்டு வீரர்கள் தங்களின் முதல் உலகக் கிண்ண ஆட்டத்தில் சதமடித்தது இதுவே முதல்முறை.
நடப்பு வெற்றியாளர் இங்கிலாந்துக்கு எதிரான இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி கண்டது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து ஒன்பது விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களை எடுத்தது.
அதற்குப் பிறகு 36.2 ஓவர்களில் 283 ஓட்டங்களைக் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது நியூசிலாந்து. ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் 250 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை ஓர் அணி இவ்வளவு குறைவான ஓவர்களில் அடைந்திருப்பது இதுவே முதல்முறை என்று ஈஎஸ்பிஎன் ஊடகத்தின் கிரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2015ஆம் ஆண்டில் 36.5 ஓவர்களில் தனது இலக்கான 261 ஓட்டங்களை இந்தியா அடைந்தது சாதனையாக இருந்தது.
கான்வே 152 ஓட்டங்களைக் குவித்தார், இந்திய வம்சாவளி வீரரான ரவீந்திரா 123 ஓட்டங்களை எடுத்தார். 23 வயதான ரவீந்திரா, ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சதமடித்த ஆக இளம் நியூசிலாந்து வீரரும் ஆவார்.
அதோடு, முதன்முறையாக ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டத்தில் களமிறங்கி சதமடித்த மூன்றாவது ஆக இளம் வீரராகவும் அவர் திகழ்கிறார். இந்தியாவின் விராத் கோஹ்லி, ஸிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் ரவீந்திரா இருக்கிறார்.
மேலும், ஒரே உலகக் கிண்ண ஆட்டத்தில் சதமடித்த முதல் நியூசிலாந்து இணை என்ற பெருமையும் கான்வே, ரவீந்திரா இருவரையும் சேரும்.
2019ஆம் ஆண்டில் அரங்கேறிய சென்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்திலும் வேல்சிலும் நடைபெற்றது. அப்போட்டியின் இறுதியாட்டத்திலும் இங்கிலாந்து, நியூசிலாந்தைச் சந்தித்தது.
அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிகண்டு உலகக் கிண்ணத்தை வென்றது.