ஹாங்ஜோ: தென்கொரியாவின் ஆண்கள் ரோலர் ஸ்கேட்டிங் அணி வெற்றியின் அருகில் வந்துவிட்டோம் என்று எண்ணி அவசரப்பட்டு கொண்டாடியதால் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளது.
ஆசிய விளையாட்டில் திங்கட்கிழமை இரவு, ஆண்களுக்கான 3,000 மீட்டருக்கான ரோலர் ஸ்கேட்டிங் தொடர் ஓட்டம் நடந்தது.
அதில் தென்கொரியாவுக்கும், தைவானுக்கும் கடுமையான போட்டி நிகழ்ந்தது.
பந்தய தூரத்தை முடிக்கும் நிலையில் தென்கொரியா முன்னிலை வகித்தது.
தென்கொரியாவின் ஜுங் ஜியோல்வான் வெற்றிக்கோட்டுக்கு அருகே வரும்போது தைவானின் ஹூவாங் யுன்-லின் சற்று பின்தங்கி இருந்தார்.
இனி தைவானால் வெற்றிபெற முடியாது என்ற அலட்சியத்தில் ஜுங் ஜியோல்வான் கொண்டாடத் தொடங்கினார்.
ஆனால் ஹூவாங் தமது காலை நீட்டி ஜுங் ஜியோல்வான் பந்தயக் கோட்டைத் தொடுவதற்கு முன்னரே வெற்றிக்கோட்டைத் தொட்டு தைவானுக்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்தார்.
இரு வீரர்களுக்கும் இடையே உள்ள நேர இடைவெளி 0.1 வினாடிக்கு குறைவாகத் தான் இருந்தது.
தனது அலட்சியத்தால் தன் அணியில் இருந்த மற்ற இரு வீரர்களின் தங்கப்பதக்கக் கனவையும் தகர்த்தார் ஜுங் ஜியோல்வான்.