டாக்கா: தன்னுடன் சேர்ந்து தம்படம் எடுக்க வந்த ரசிகரை பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அடிக்கப் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா பிரிமியர் லீக்கில் திங்கட்கிழமையன்று (மே 6) நடந்த ஆட்டத்தில் ஷேக் ஜமால் தன்மோண்டி மன்றக் குழுவும் பிரைம் பேங்க் கிரிக்கெட் மன்றக் குழுவும் மோதின.
அதில் ஷேக் ஜமால் தன்மோண்டி மன்றக் குழுவிற்காக ஷாகிப் விளையாடி வருகிறார்.
அப்போட்டியில் பூவா தலையா போடுமுன் பயிற்றுநர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஷாகிப். அப்போது அவ்விடத்திற்கு வந்த ரசிகர் ஒருவர், ஷாகிப்புடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
அதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஷாகிப், அந்த ரசிகரின் கைப்பேசியைப் பறிக்க முயன்றார்; அவரை அடித்துவிடுவதாக கையையும் ஓங்கினார்.
அதனையடுத்து, அந்த ரசிகர் அங்கிருந்து அகல, பயிற்றுநர்களுடன் பேச்சைத் தொடர்ந்தார் ஷாகிப்.
இம்மாதம் 3ஆம் தேதி காஸி குழும அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ஷாகிப், பிரைம் பேங்க் குழுவிற்கெதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்த மாதம் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்ளாதேஷ் அணியில் ஷாகிப் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.