வாட்டன்/ஹில்கிரெஸ்ட் வட்டாரத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கும் உதவும் ‘பி கைண்ட், டிரைவ் சேஃப்’ என்ற இயக்கம், மே 6ஆம் தேதி, போகன்வில்லா பூங்காவில் உள்ள வாட்டன் குடியிருப்பாளர்கள் மையத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்த முன்னோடித் திட்டம், புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைமையில் சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்துடன் இணைந்து, நகராட்சி சேவைகள் அலுவலகம், போக்குவரத்துக் காவல்துறை ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
‘கவுண்ட்டவுன் அணுகுமுறை’யையொட்டி இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையில் பதாகைகளும் கிரீன்வுட் அவென்யூ, வாட்டன் எஸ்டேட் சாலை, ஹில்கிரெஸ்ட் சாலை ஓரங்களில் தகுந்த இடைவெளியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
வேக வரம்பிற்குள் வாகனத்தை ஓட்டினால் முக்கியச் சாலையை அடைய எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை ஓட்டுநர்களுக்குத் தெரிவிக்கும் எண்ணத்தோடு இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
வாட்டன் எஸ்டேட்டில், குடியிருப்பாளர்கள் மட்டுமல்லாமல் பள்ளிக்கு நடந்துசெல்லும் மாணவர்கள், பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், விநியோகப் பணியாளர்கள் போன்றவர்களும் சாலையைப் பயன்படுத்துவதை புக்கிட் தீமா போக்குவரத்துப் பணிக்குழுவின் தலைவர் ஆங் கய் ஷின் விளக்கினார்.
மேலும், சென்ற ஆண்டு ஹில்கிரெஸ்ட் சாலை வழியாகப் பள்ளிக்கு அருகில் உள்ள ‘ஸீப்ரா கிராசிங்’ எனப்படும் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியில் வேகமாகச் சென்று சரியான நேரத்தில் நிற்கத் தவறிய வாகனம் ஒன்று அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பியது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, இத்தகைய முயற்சி உதவும் என்று நம்புவதாகத் திருவாட்டி ஆங் கூறினார்.
இந்த இயக்கத்தைத் தொடங்கிவைக்கும் விதமாக, ‘பி கைண்ட், டிரைவ் சேஃப்’ பதாகைகளை திருவாட்டி சிம் ஆனும் டாக்டர் ஃபைஷலும் காட்சிப்படுத்தினர். சிங்கா கனிவன்பு உருவச்சின்னமும் நிகழ்ச்சிக்கு வருகைதந்தது.
“இது ஒருமுறை மட்டும் இடம்பெறும் முயற்சியாக இன்றைய நிகழ்ச்சியோடு நின்றுவிடக்கூடாது. சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே என்றென்றும் நிலவவேண்டும். சாலைப் பாதுகாப்பைப் பொதுமக்கள் உள்வாங்குவதற்கு உதவும் புதிய வழிகளை நாம் தொடர்ந்து கண்டுபிடிக்க வேண்டும்,” என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.
மேலும், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான இடங்களை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தற்போது மற்றோர் இடத்தில் இந்த இயக்கம் தொடர்பான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடித்து வேக வரம்பிற்குள் வாகனத்தை ஓட்டிய 56 வயது கிராப் ஓட்டுநர் எங் கியாம் பெங்கிற்குப் பரிசுப் பை ஒன்று வழங்கப்பட்டது.