புக்கிட் தீமாவில் உள்ள ‘தி துவின்ஸ்’ கூட்டுரிமை குடியிருப்புக் கட்டடத்தில் சனிக்கிழமை (மே 4) நீர்க்குழாய் ஒன்று பழுதடைந்ததால் அங்குள்ள அடித்தள கார் நிறுத்துமிடத்தில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது.
வெள்ளக்காடாகக் காட்சியளித்த அந்த கார் நிறுத்துமிடத்தில் குடியிருப்பாளர் ஒருவர் நடந்துசெல்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.
பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு குடியிருப்பாளர், ஏறக்குறைய 20 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
எண் 6 பால்மோரல் கிரசென்டில் இச்சம்பவம் குறித்து காலை 7.55 மணிக்குத் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடனும் கட்டட நிர்வாக முகவருடனும் சேர்ந்து செயல்பட்டு கார் நிறுத்துமிடத்தில் இருந்து நீரை வெளியேற்றியதாக அது கூறியது.
கீழ்த்தளத்தின் சேமிப்புத் தொட்டியில் நீர்க்குழாய் பழுதடைந்ததால் நீர் வெளியேறி, கார் நிறுத்துமிடத்தில் வெள்ளம் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கழகம் சொன்னது.
“இந்தத் தனிப்பட்ட சம்பவம் மழையால் ஏற்படவில்லை. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அப்பகுதியில் மழை கடுமையாக இல்லை. அருகிலிருந்த வடிகால்களில் மழைநீர் நிரம்பவும் இல்லை,” என்று அது விவரித்தது.