நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஊழியர்கள் முன்வைக்கும் விண்ணப்பங்களை முதலாளிகள் நியாயமாகப் பரிசீலிப்பது அவசியம் என்ற புதிய விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
கூடுதலானோரை ஊழியரணிக்கு ஈர்ப்பதும் தக்கவைத்துக்கொள்வதும் அதன் நோக்கங்கள் என்று அந்த விதிமுறையை வரையறுத்த முத்தரப்புப் பணிக்குழு, ஏப்ரல் 23ஆம் தேதி கூறியுள்ளது.
இதன் தொடர்பில் வெளியான முத்தரப்பு வழிகாட்டிக் குறிப்புகள் சிங்கப்பூர் ஊழியரணியின் மனிதவள ஆற்றலை மேம்படுத்த உதவும்.
சிங்கப்பூரின் இன்றைய உயர்ந்த நிலைக்குக் காரணம் நாட்டில் பின்பற்றப்படும் வேலை தொடர்பான வலுவான நெறிமுறைகள். புதிய வழிகாட்டிக் குறிப்புகள் அவற்றை அப்புறப்படுத்தமாட்டா என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (எஸ்என்இஎஃப்) கௌரவச் செயலாளரும் 11 உறுப்பினர்களைக்கொண்ட முத்தரப்புப் பணிக்குழுவின் மூன்று இணைத் தலைவர்களில் ஒருவருமான எட்வின் இங் கூறினார்.
பணிக்குழுவின் மற்றோர் இணைத்தலைவரும் மனிதவள, கல்வித் துணை அமைச்சருமான கான் சியாவ் ஹுவாங், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத் தலைவர் ஆங் யுயிட், எஸ்என்இஎஃப் நிர்வாக இயக்குநர் சிம் கிம் குவான் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஏப்ரல் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய வழிகாட்டிக் குறிப்புகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கவலைகள் குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது.
உள்ளூர் வேலைகளை வெளிநாடுகளில் இருப்போரைக்கொண்டு செய்தல், முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பினரிடையேயும் பொறுப்பையும் கட்டுப்பாட்டையும் வளர்த்தல் போன்றவை தொடர்பான கவலைகள் முன்வைக்கப்பட்டன.
மக்கள் அமைதியாக, அக்கறையுடன் இந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் படித்துப் பார்ப்பர் என்று நம்புவதாகத் துணை அமைச்சர் கான் கூறினார்.
உள்ளூர் வேலைகளை வெளிநாடுகளில் செய்தல் குறித்த கேள்விக்கு, நிறுவனங்கள் அவற்றின் வர்த்தக நடைமுறைக்கேற்ற ஊழியர்களையே தேடுவதாகவும் வழிகாட்டிக் குறிப்புகள் இருப்பதால் அந்த நடைமுறை பாதிக்கப்படாது என்றும் திரு இங் கூறினார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உள்ளூரில் ஆட்சேர்ப்பு செய்ய இயலாத வேலைகளுக்கு, உரிய திறனாளர்களைத் தேட இந்த வழிகாட்டிக் குறிப்புகள் உதவும் என்று திரு ஆங் குறிப்பிட்டார்.
உள்ளூர்த் திறனாளர்களின் உற்பத்தித் திறன், இதர திறன்கள், வேலை நெறிமுறை ஆகியவை போட்டித்தன்மையுடன் விளங்குவதாகக் கூறிய துணை அமைச்சர் கான், குழுவாக இணைந்து பணியைச் செய்ய ஊக்குவிப்பதற்கு, ஊழியர்களுக்கு இடையே நேரடித் தொடர்பு அவசியம் என்றார்.
டிசம்பர் 1ஆம் தேதி புதிய விதிமுறை நடப்புக்கு வந்த பிறகு அதிகமானோர் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு விண்ணப்பிக்கக்கூடும் என்ற கவலை முதலாளிகளுக்கு எழுந்துள்ளது.
இதன் தொடர்பில் வேலைக்கான எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தும் முழுமையான கொள்கையை நிறுவனங்கள் நடைமுறப்படுத்த வேண்டும் என்று திரு சிம் கூறினார்.
ஊழியர்களிடையே இந்த வழிகாட்டிக் குறிப்புகள் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த தேசியத் தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து பணிக்குழு செயலாற்றும் என்று துணை அமைச்சர் கான் கூறினார்.