மோசடிக்காரர்களிடம் சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 78 பேரை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் 17 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஏப்ரல் 8 முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர். அவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
காவல்துறை, ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 46 ஆடவர்கள், 32 பெண்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர்களில் சிலர் 10,000 வெள்ளிக்குத் தங்கள் சிங்பாஸ் விவரங்களை மோசடிக்காரர்களிடம் விற்றதாகக் கூறப்படுவது தெரியவந்தது. அந்த விவரங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன; கைப்பேசிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகிக்கப்படுவோரில் பெரும்பாலோருக்கு மோசடிக்காரர்கள் உறுதியளித்தபடி தொகையைத் தரவில்லை என்று காவல்துறை கூறியது.
சந்தேக நபர்களில் சிலர், அறிமுகமற்றோர் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது.
2023ஆம் ஆண்டு, கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்திலும் ஊழல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு எதிரான சட்டத்திலும் திருத்தம் செய்வது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றன.
குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருத்தலிலிருந்து மக்களைத் தடுப்பதும் மக்களும் நிறுவனங்களும் அன்றாடப் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் சிங்பாஸ் விவரங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த உதவுவதும் இந்தத் திருத்தங்களின் நோக்கம்.
சிங்பாஸ் விவரங்களைக் குற்ற நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வெளியிட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
கணினியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 வரையிலான அபராதமோ ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.