காவல்துறை அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட மோசடித் தடுப்பு நடவடிக்கையில், பல்வேறு மோசடிகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் எட்டுப் பேர் பதின்ம வயதினர்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அரசாங்க அதிகாரிகளைப்போல் வேடமிட்ட மோசடி, இணையக் காதல் மோசடி, வாடகை மோசடி போன்ற பல்வேறு பணமோசடிகளில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாக மார்ச் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படுவோரில் 19 பேர், தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை குற்றச்செயல் கும்பல்களிடம் பகிர்ந்துகொண்டனர் அல்லது பணப் பரிமாற்றத்துக்கு உதவியதாகக் கூறப்பட்டது.
மேலும் மூவர், தங்கள் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, ஏடிஎம் அட்டைகளையும் இணைய வங்கிச் சேவைக்கான விவரங்களையும் மோசடிக்காரர்களிடம் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
எஞ்சிய ஒன்பது பேர், வங்கிக் கணக்குத் தொடங்க ஏதுவாக மோசடிக்காரர்களிடம் தங்கள் சிங்பாஸ் விவரங்களை விற்றதாகக் கூறப்பட்டது.
பணமோசடிகளை ஒடுக்கவும் வங்கி, சிங்பாஸ் கணக்கு விவரங்களை விற்பதைத் தடுக்கவும், 2023 மே மாதம் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.
அச்சட்டங்களின்கீழ், மோசடிக்காரர்கள் என்று தெரியாமல் வங்கி, சிங்பாஸ் கணக்கு விவரங்களைத் தந்ததாக மோசடிக்கு உதவிய யாரும் கூற முடியாது.