சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆராயும் ஆய்வுக்கு சிங்கப்பூர் நிதி வழங்கவுள்ளது.
உலகளவில் இருந்துவரும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை மேலும் புரிந்துகொள்ளவும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்கான உத்திகளை உருவாக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் அடுத்த ஆண்டுக்கான உலக போதைப்பொருள் அறிக்கையில் சேர்க்கப்படும்.
போதைப்பொருள் தொடர்பான வழிமுறைகளை வரையும் ஐக்கிய நாட்டுச் சபையின் முதன்மை அமைப்பான போதைப்பொருள் பிரிவு (சிஎன்டி) அந்த அறிக்கையை வெளியிடும்.
ஆஸ்திரியத் தலைநகர் வியென்னாவில் சிஎன்டி 67வது முறையாகக் கூடியது. அதில் பேசிய சிங்கப்பூரின் உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்த வட்டாரத்திலும் உலகளவிலும் மோசமடைந்துவரும் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தகுந்த ஆதாரத்துடன் திட்டவட்டமாக ஒன்றுபட்டு தீர்வுகாணவேண்டும் என்று குறிப்பிட்டார்.
“கடந்த 10 ஆண்டுகளில் கிழக்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் மாற்றியமைக்கப்பட்ட போதைப்பொருள்களின் (சிந்தெட்டிக் டிரக்ஸ்) உற்பத்தியும் கடத்தலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மெத்தாமிட்டஃபினுக்கு இது பொருந்தும்.
“அத்தகைய சட்டவிரோத போதைப்பொருளை உருவாக்கக் கடத்தும் நடவடிக்கைகள் ‘கோல்டன் டிரையாங்கல்’ வட்டாரத்தில் அதிகரித்துள்ளன. நாடு கடந்து செயல்படும் குற்றக் கும்பல்கள் கூடியுள்ளன. அவை போதைப்பொருள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன,” என்றார் திருவாட்டி டியோ. இந்தப் போக்கு சிங்கப்பூருக்குக் கவலை தருவதாகும் என்றும் அவர் சொன்னார்.
‘கோல்டன் டிரையாங்கல்’, தாய்லாந்து, மியன்மார், லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் ஒன்றுசேரும் பகுதியாகும்.
இந்த வட்டாரத்தில் மாற்றியமைக்கப்பட்ட போதைப்பொருள் விநியோகம் மோசமான நிலையில் இருப்பதாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. 2022ல் 151 டன் அளவிலான ஐஸ் என்றழைக்கப்படும் மெத்தாமிட்டஃபின் பறிமுதல் செய்யப்பட்டது; அந்த அளவு, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் பதிவானதற்கு நிகரானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.