சிங்கப்பூர் அறப்பணி அமைப்புகளில் ஒன்றான ‘ஃபுட் ஃபிரம் த ஹார்ட்’ மற்றுமொரு உணவுப் பொருள் திரட்டும் இயக்கத்தை இவ்வார இறுதியில் நடத்துகிறது.
தேவைப்படுவோருக்கு உதவ பொதுமக்கள் இந்த இயக்கத்திற்கு வாகனத்தில் நேரடியாகயாகவும் வந்து உணவுப் பொருள்களை நன்கொடையாக வழங்கலாம்.
மார்ச் 2, 3 தேதிகளில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையில் 45 லெங் கீ ரோட்டில் உள்ள வியர்ன்ஸ் ஆட்டோமோட்டிவ் இடத்தில் இயக்கம் நடைபெறுகிறது.
இதன் மூலம் 25,000க்கும் அதிகமான உணவுப் பொருள்களை திரட்ட முடியும் என்று ‘ஃபுட் ஃபிரம் த ஹார்ட்’ நம்புகிறது.
கடந்த ஆண்டு 22,246 உணவுப் பொருள்களும் $52,000 நிதியும் திரட்டப்பட்டது.
இயக்கத்தின் வழியாகத் திரட்டப்படும் பொருள்களின் ஒரு பகுதி, லெங்காக் பாருவில் உள்ள சமூகக் கடைக்கு வழங்கப்படும். எஞ்சியவை குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் விநியோகிக்கப்படும்.
மார்ச் 2ஆம் தேதி இயக்கம் நடைபெற்ற இடத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்றபோது, முதலில் காரில் வந்தவர் நன்கொடைகளை அதற்கான தொட்டியில் போட்டார்.
இரண்டாவது நன்கொடையாளரான திரு மைக் சியா, ‘ஃபுட் ஃபிரம் த ஹார்ட்’டுக்கு தொண்டூழியம் செய்யும் தனது சகோதரர் இந்த இயக்கம் பற்றி தெரிவித்ததாகக் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 54 வயதான அவர், பிஸ்கட்ஸ், அரிசி, காப்பிப் பொட்டலங்கள் போன்றவற்றை தானமாக வழங்கினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் பேசிய ஐவரில் நான்கு கொடையாளர்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
அப்படிப்பட்ட தம்பதியரான வர்த்தக மேம்பாட்டு நிர்வாகியான மைக்கல் ஹியாவும் ஆய்வு அதிகாரியான அவரது மனைவி மவ்ரின் சியாவும் இரண்டு வயது குழந்தை மேக்ஸிலஸ் ஹியாவுடன் நன்கொடையளிக்க வந்தனர். அரிசி, ஓட்ஸ், பீநட் பட்டர், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை அவர்கள் நன்கொடையாக தந்தனர்.