‘ஸிப்லைன்’ எனும் சாகச விளையாட்டின்போது மாணவி அணிந்திருந்த பாதுகாப்பு உடையைச் சரிபார்க்க தவறிய பயிற்றுவிப்பாளருக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தப் பயிற்றுவிப்பாளரின் பெயர் அல்வினா லீ பெயூ. 34 வயதான அல்வினா தன்மீது சுமத்தப்பட்ட மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டுக் கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டைப் பிப்ரவரி 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் 2020ஆம் ஆண்டுப் பிப்ரவரி 12ஆம் தேதி கான்கார்ட் தொடக்கப்பள்ளியில் நடந்தது.
லீயின் கவனக்குறைவால் தொடக்கநிலையில் நான்காம் வகுப்பு பயின்ற அந்த ஒன்பது வயது மாணவி 4 மாடி, அதாவது 11 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவியின் முழங்கை, இடுப்பு, அடிவயிற்று எலும்பு பகுதி ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அந்த மாணவி 15 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அச்சமயத்தில் தன்னுரிமை பயிற்றுவிப்பாளரான லீக்கு 4 ஆண்டுகள் அனுபவம் இருந்தது.
அந்த மாணவியின் பள்ளி வழங்கிய வெளிப்புற விளையாட்டில் பங்கேற்றபோது இவ்விபத்து நடந்தது.
சாகச விளையாட்டில் பங்கேற்ற மாணவர்களின் பாதுகாப்பு உடைகளைச் சரிபார்ப்பது பயின்றுவிப்பாளரான அல்வினாவின் கடமை. ஆனால், வெளிப்புற விளையாட்டில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பு உடை சரியாக இல்லாததைக் கவனிக்காதது அல்வினாவின் தவறு என நீதிமன்றம் தெரிவித்தது.