சிங்கப்பூர் முழுவதும் 187 நிலப் பகுதிகள் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
காய்கறிகள், உண்ணக்கூடிய தாவரங்களை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த நிலப் பகுதிகளைப் பயன்படுத்தி தோட்டக் கலையில் ஈடுபடலாம்.
தேசிய பூங்காகக் கழகம் பிப்ரவரி 20ஆம் தேதி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 10.00 மணியிலிருந்து மார்ச் 5ஆம் தேதி இரவு 11.59 வரை நிலப் பகுதிக்கு விணணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான நிலப் பகுதிகள், அதாவது 120 தோட்டப் பகுதிகள் உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்கா மற்றும் தெம்பனிசில் உள்ள சன் பிளாசாவில் இடம்பெற்று உள்ளன.
எஞ்சிய தோட்ட நிலப் பகுதிகள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் ‘ஏரியா ஏ’, லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கப் பூங்கா, பொங்கோல் வாட்டர்வே பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆகிய இடங்களில் உள்ளன.
நிலப்பகுதிகளுக்குப் புதிய வசதியான முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
இணையம் வழியாக விண்ணப்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை விருப்பமுள்ளவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய ஏஎக்ஸ்எஸ் இணையப் பக்கம், ஏஎக்ஸ்எஸ் கைபேசிச் செயலி, ஏஎக்ஸ்எஸ் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கழகம் கூறியது.
இதன் மூலம் நிலப் பகுதி கிடைத்தவர்கள் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்துவது எளிதாக இருக்கும் என்று அது தெரிவித்தது.
குலுக்கலில் வெற்றி பெறாதவர்களுக்குக் குலுக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகு மின்னஞ்சல் வழியாக விவரம் தெரிவிக்கப்படும். இதற்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியிலிருந்து மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கழகம் மேலும் தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தோட்டத்திற்கு நிலம் ஒதுக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 2,400 நிலப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 800 தோட்டங்களை 27 குடியிருப்பு வட்டாரங்களில் குடியிருப்பாளர் குழுக்களும் குடியிருப்பாளர் கட்டமைப்புகளும் நிர்வகித்து வருகின்றன.