கைதி ஒருவரிடமிருந்து $406 திருடிய முன்னாள் மூத்த சிறை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தக் கைதியிடம் திருப்பிக் கொடுக்க வேண்டிய அந்தப் பணத்தை 49 வயது முகம்மது ரஹாடியான் முகம்மது காசிம் கொடுக்காமல் வைத்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரியிடம் பொய்த் தகவல் கொடுத்தது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கப்பட்டபோது கருத்தில் கொள்ளப்பட்டது.
முகம்மது ரஹாடியான், செலராங் பார்க் வளாகத்தில் பணிபுரிந்தார்.
விடுதலை செய்யப்படும் கைதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று அவரிடம் பத்து பைகள் ஒப்படைக்கப்பட்டன.
அன்று விடுதலையாகும் கைதிகளுக்கு அவை சொந்தமானவை. அந்தப் பைகளை முகம்மது ரஹாடியான் அவர்களிடம் தர வேண்டும்.
ஆனால் நசருதீன் என்பவருக்குச் சொந்தமான $406 ரொக்கம் இருந்த பையை முகம்மது ரஹாடியான் வைத்துகொண்டார்.
நசருதீனைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் ஹார்பர்ஃபிரண்ட் சென்டருக்கு அழைத்துச் சென்றபோது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ரொக்கத்தை நசருதீன் எண்ணிப் பார்த்தார். தமக்குத் தர வேண்டிய பணத்தைவிட குறைவான ரொக்கம் தம்மிடம் இருந்ததை அவர் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து சிறைத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமது குற்றத்தை மறைக்க முகம்மது ரஹாடியான் முயன்றார்.
ஆனால் நசருதீனின் பணம் இருந்த பையை அவர் வைத்திருந்தது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது.