ஏடிஎச்டி எனும் கவனக்குறைவுப் பிரச்சினை இருப்போர் நிதியுதவி உட்பட பல்வேறு உதவித் திட்டங்களுக்குத் தகுதிபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎச்டி உள்ளிட்ட மூளை செயல்பாடு சார்ந்த பிரச்சினைகள், அவற்றால் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றின் தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வை அதிகரிக்கும் வேளையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎச்டி பிரச்சினை இருப்போருக்குக் கைகொடுக்க பலவகை ஆதரவு உள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி வெள்ளிக்கிழமையன்று (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் கூறினார். சிறுவர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (சிடிபி) ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற 70 விழுக்காடு வரை விலைக் கழிவு பெறலாம். பலதுறை மருந்தகம் அல்லது சாஸ் திட்டத்தில் இடம்பெறும் பொது மருந்தகங்களின் பரிந்துரையில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு இது பொருந்தும்.
பள்ளி செல்லும் ஏழு வயதைத் தாண்டிய சிறுவர்கள் பள்ளிகளின்வழி வழங்கப்படும் சிகிச்சையை இலவசமாகப் பெற முடியும் என்றும் டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.