தங்கள் ஓய்வுக்காலத்துக்கு கூடுதலாக சேமிக்க விரும்பும் மத்திய சேம நிதிக் கழக உறுப்பினர்கள் எதிர்வரும் 2025ஆம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்ய முடியும்.
இதற்கான மேம்பட்ட ஓய்வுக்கால சேமிப்பு நிதியில் நிரப்பக்கூடிய உச்சவரம்புத் தொகை ஒருவரின் அடிப்படை ஓய்வுக்கால சேமிப்பு தொகையிலிருந்து நான்கு மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.
தற்பொழுது இந்த உச்சவரம்பு அடிப்படை ஓய்வுக்கால தொகையிலிருந்து மூன்று மடங்காக உள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நினைவுகூர்ந்தார்.
உதாரணமாக, தற்போது $319,500 என்றிருக்கும் ஓய்வுக்கால சேமிப்பு நிதி உச்சவரம்பு ஜனவரி 2025லிருந்து 426,000 உயரும். இதன்மூலம் 55 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மத்திய சேம நிதிக் கழக உறுப்பினர்கள் ஓய்வுக்கால சேமிப்புத் நிதியில் கூடுதல் தொகையை நிரப்பி கூடுதல் மாத வழங்கீட்டைப் பெறலாம்.
அடிப்படை ஓய்வுக்கால நிதி உறுப்பினர் ஒருவரின் மாத வாழ்க்கைச் செலவினத்துக்கு தேவையான தொகையை வழங்குகிறது.
புதிய மேம்பட்ட ஓய்வுக்கால சேமிப்பு நிதி மத்திய சேம நிதி முறையில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான மாற்றங்களில் இது ஒரு பகுதி என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
இவற்றுடன், ‘மேட்ச்டு ரிடையர்மண்ட் சேவிங்ஸ்’ என்ற ஓய்வுக்கால சேமிப்பில் நிரப்பப்படும் நிதிக்கு ஈடாக செலுத்தப்படும் நிதித் திட்டம், சில்வர் சப்போர்ட் ஸ்கீம் என்ற முதியோர் ஆதரவுத் திட்டம் ஆகியவற்றின் மூலமும் முதியோரின் ஓய்வுக்காலத்திற்கு கூடுதல் உதவி வழங்கப்படும்.
“இதன்படி, ஓய்வுக்கால சேமிப்பில் நிரப்பப்படும் நிதிக்கு ஈடாக செலுத்தப்படும் நிதித் திட்டம் 70 வயதுக்கு மேலானவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,” என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.