லக்கி பிளாசா கடைத்தொகுதியில் குடிபோதையில் 15 நிமிட இடைவெளியில் மூன்று பெண்களை மானபங்கம் செய்த ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜோசப் மார்க் மெர்வின் எனப்படும் அந்த 48 வயது ஆடவர் 2023 ஆகஸ்ட் 6ஆம் தேதி அந்தக் கடைத்தொகுதியில் இருந்த பொழுதுபோக்குக் கூடத்தில் மது அருந்திய பின்னர் மாலை 6.50 மணியளவில் வெளியே வந்தார். படிக்கட்டு அருகே தோழியுடன் நின்றிருந்த 18 வயதுப் பெண்ணை அவர் மானபங்கம் செய்தார்.
ஐந்து நிமிடம் கழித்து, மாலை 6.55 மணியளவில் லக்கி பிளாசா வெளியே 44 வயதுப் பெண்ணை ஜோசப் மானபங்கம் செய்தார்.
பின்னர், இரவு 7.05 மணியளவில் சுரங்கப் பாதையில் 28 வயதுப் பெண்ணை அவர் மானபங்கம் செய்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு புதன்கிழமை (பிப்ரவரி 14) தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோசப் 1996ஆம் ஆண்டிலும் மானபங்கக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக ஒன்பது மாத சிறை மற்றும் மூன்று பிரம்படிகளைத் தண்டனையாக அனுபவித்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.