பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது ஆடவரை மானபங்கப்படுத்தி, அவரிடமிருந்து பணப்பையைத் திருடிய 64 வயது ஆடவருக்கு ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட ஒரு மானபங்க குற்றச்சாட்டையும் ஒரு திருட்டு குற்றச்சாட்டையும் டான் கிம் சாய் நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார்.
பாதிக்கப்பட்டவரின் விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் பெயர், அடையாம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இக்குற்றத்தை இவ்வாண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்று ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் டான் புரிந்ததாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் அந்தக் கடைத்தொகுதியில் இருந்த கழிவறைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்ற டான் அவரை மானபங்கப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
கழிவறையில் யாரும் இல்லாததால் பாதிக்கப்பட்டவர் உதவிக்கு யாரையும் அழைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவரின் காற்சட்டை பையிலிருந்த பணப்பையை டான் எடுத்துகொண்டு கழிவறையைவிட்டு விரைவாக சென்றதாகவும் குறிப்பிடப்பட்டது.
அந்தப் பணப்பையில் 125 வெள்ளி ரொக்கம் இருந்ததாக கூறப்பட்டது.
இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அடுத்த நாள் டான் கைது செய்யப்பட்டார்.