சிங்கப்பூர் சோதனைச்சாவடிகள் வழியாக வரும் சரக்கு வாகன ஓட்டுநர்கள், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் காகித அனுமதியைச் சரிபார்க்க இனி காத்திருக்க இனி வேண்டியதில்லை.
இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடிவதாக அவர்கள் கூறினர்.
மாறாக, தங்களது வாகன எண்ணையும் சரக்கு அனுமதியையும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) ‘எஸ்ஜி வருகை அட்டை சரக்கு’ அம்சத்தின் மூலமாகவோ மைஐசிஏ கைப்பேசிச் செயலி வழியாகவோ சமர்ப்பிக்கலாம். சிங்கப்பூர் சோதனைச்சாவடிக்கு வந்துசேர்வதற்கு முன்பு அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும்.
12 மணி நேர வேலையின்போது தாங்கள் கவனித்ததன்படி, ஓரிரு ஓட்டுநர்கள் மட்டுமே இன்னும் காகித அனுமதியைப் பயன்படுத்துவதாக ஐசிஏ அதிகாரிகள் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.
ஐசிஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 2023 வருடாந்திர புள்ளி விவரத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி 94 விழுக்காட்டிற்கும் அதிகமான ஓட்டுநர்கள் காகிதமில்லா சரக்கு அனுமதி முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரின் நில, ஆகாய, கடல் சோதனைச்சாவடிகளில் வழக்கமான சரக்குகளுக்கான இந்தக் காகிதமில்லா அனுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நில சோதனைச்சாவடிகள் வழியாக இங்கு வரும் சரக்குகள் வழக்கமான சரக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஓட்டுநரின் அனுமதி அவரது வாகனப் பதிவு எண்ணுடன் இணைக்கப்படுகிறது. இதனால் காகித அடிப்படையில் அனுமதிக்கான அவசியமின்றி வாகனத்தை அனுமதிக்க அதிகாரிகளால் முடிகிறது.
இந்த ஏற்பாட்டின் மூலம் வாகன அனுமதி நேரம் சராசரியாக ஏழு நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிஏ தெரிவித்தது.
உட்லண்டஸ் சோதனைச்சாவடியில் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஐந்து சரக்கு வாகன ஓட்டுநர்கள், காகிதமில்லா அனுமதி முறையைப் பயன்படுத்துவது எளிதாக இருந்ததாகக் கூறியிருந்தனர்.