ஜாலான் புசார் வட்டாரத்திலுள்ள ஒரு கடைவீட்டின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து சீன உணவுக் கடை ஒன்று மூடப்பட்டுள்ளது.
207 ஜாலான் புசார் என்ற முகவரியில் செயல்படும் ‘ஆதென்டிக் மன் சீ கூ கிங் ஆஃப் பிக் ஆர்கன்ஸ் சூப்’ என்ற அந்தக் கடையைச் சுற்றி அபாயத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
உணவகத்தையும் அதற்கு அடுத்த கடையையும் பிரிக்கும் சுவர் விழுந்து உடையும் அபாயமுள்ளது குறித்து கட்டட, கட்டுமான ஆணையம், உணவக உரிமையாளர் சன் ரன்யாவிடம் தெரிவித்ததாக ஷின் மின் நாளிதழ் புதன்கிழமையன்று (பிப்ரவரி 7) குறிப்பிட்டது.
எண் 203, 205, 207 ஆகிய கடைவீடுகளைப் பரிசோதித்த அதிகாரிகள், தரை இறங்கியதால் இவ்வாறு நடந்திருப்பதாகக் கூறினர். ஆயினும், சேதமடைந்துள்ள சுவர்கள் மேல்மாடிகளின் பாரத்தைச் சுமப்பவை அல்ல என்றும் கட்டடத்தின் பாதிக்கப்படாத பகுதிகளைப் பயன்படுத்தலாம் என்றும் ஆணையம் தெரிவித்தது.
உணவகத்தின் வாசலில் ஒட்டப்பட்டுள்ள அறிக்கையில், அதனைச் சுற்றிய பகுதி ஆபத்தான அல்லது அபாயகரமான இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டடத்தில் உரிய பழுதுபார்ப்பு மேற்கொள்ளுமாறும் அக்கடைவீட்டுக்கு ஆணையம் உத்தரவிட்டிருப்பதையும் அதன் அறிக்கை காட்டுகிறது
கடைவீட்டு உரிமையாளரின் முகவர், தம்மை அங்கிருந்து இரண்டு நாள்களுக்குள் வெளியாகும்படி அறிவுறுத்தியதாக உணவக உரிமையாளர் திரு சன் தெரிவித்தார். கட்டட, கட்டுமான ஆணையத்திடம் முறையிட்ட பிறகு, அவர் வெளியேறுவதற்கன காலக்கெடு பிப்ரவரி 6 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் 50,000 வெள்ளி வரையிலான இழப்பு தமக்கு ஏற்படலாம் என்றும் திரு சன் சொன்னார்.
இந்தச் சம்பவம் கவலை அளிப்பதாக இரண்டு கடைவீடுகள் தள்ளியிருக்கும் உடற்பயிற்சிக்கூட உரிமையாளர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“வர்த்தகம் பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறோம். எங்களைப் பாதுகாப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர் கூறினார்.