நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 7) அன்று அரசின் முக்கிய திட்டங்கள், இலக்குகளை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
அதில் தேசிய செயல்திட்ட வடிவில் மனநலன், உடல்நலன் ஆகியவற்றுக்கு முக்கிய முன்னுரிமை உள்ளதாக அவர் கூறினார்.
இதில் பல இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் நோக்குடன் அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். அதில் குறிப்பாக பொதுத் துறையில் உளவியல் நிபுணர்கள், உளவியல் மருத்துவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை முறையே 30%, 40% அதிகரிப்பதும் அடங்கும் என்று துணைப் பிரதமர் விளக்கினார்.
இதன் தொடர்பில், மனநல சேவை அனைத்து பலதுறை மருந்தகங்கள், 900 தனியார் மருந்தகங்கள் ஆகியவற்றில் அறிமுப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனநலன் குறித்து ஐந்து மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (பிப்ரவரி 6, 7) விவாதம் நடைபெற்றது. அதில் பங்குகொண்ட 26 உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்த துணைப் பிரதமர் வோங், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவாதத்தில் பங்குபெற்ற உறுப்பினர்கள் அதிக காத்திருப்பு நேரம், மனநல சிகிச்சை வழங்கும் அரசு மருத்துவ நிலையங்களில் சிகிச்சை நேரம் கிடைப்பதில் சிரமம் போன்ற கவலைகளை எழுப்பினர். அத்துடன், பல்வேறு மனநலப் பிரச்சினைகள் குறித்து குறைந்த அளவு விழிப்புணர்வு இருப்பதையும் அவர்கள் சுட்டினர்.
இவற்றுடன், இளையர், முதியோரிடையே மனநலனை பாதிக்கும் அம்சங்களும் எழுப்பப்பட்டன.
அரசாங்க பதவி வகிப்பவர்களில் முதலாவதாக இது குறித்துப் பேசிய நிதியமைச்சருமான துணைப் பிரதமர் வோங், சிங்கப்பூரிலும் உலக அளிவிலும் கொவிட்-19 கொள்ளைநோயினால் பாதிப்பு மோசமாகி உள்ளதாகச் சொன்னார்.
மனநலன் தொடர்பான பல அமைப்புகள் அடங்கிய பணிக்குழு தேசிய மனநலன் குறித்த திட்டங்களை வெளியிட்டுள்ளதாக துணைப் பிரதமர் கூறினார். மனநல சிகிச்சையில் தற்போது உள்ள குறைபாடுகளை நீக்கும் திட்டங்கள் அதில் அடங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மனநலப் பிரச்சினைகளுக்கு பலதரப்பட்ட தீர்வுகள் தேவை என்று அவர் விளக்கினார்.
ஆகையால், மனநலனை மேம்படுத்துவது என்பது அதிக மனநல மருத்துவர்களை மட்டும் பணியில் அமர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்துவதில் இல்லை. கூடுதல் மனநல மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றாலும் இதில் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருத்துவர்கள், பள்ளிகள், பணியிடங்கள், சமூகம் ஆகியவற்றில் சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும் என்றார்.