சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டி ஜனவரி 16ஆம் தேதி சீனா சென்றது.
அங்குப் பனியை முதல்முறையாக கண்ட ‘லெ லெ’ அதனுடன் விளையாடி தன் நேரத்தைக் கழிக்கிறது.
ராட்சத பாண்டாவிற்கான சீன பாதுகாப்பு, ஆராய்ச்சி நிலையத்தின் பராமரிப்பில் இருக்கும் ‘லெ லெ’ சிச்சுவான் மாநிலத்தில் உள்ள ஹுவாயிங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
‘லெ லெ’ 30 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குப் பின்னர் அது எங்கு கொண்டு செல்லப்படும் என்பதை அந்நிலையம் தீர்மானிக்கும்.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் ‘லெ லெ’ மூன்று வயதை எட்டும்.
ஜனவரி 30ஆம் தேதி, அந்நிலையம் 1 நிமிட 40 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்றை சீனாவின் ‘டிக் டாக்’ பதிப்பான ‘டூயின்’ இல் வெளியிட்டது.
பராமரிப்பாளர் ஒருவர் ஒரு வாளியில் வெளியிலிருந்துப் பணியை அள்ளிகொண்டு வந்து ‘லெ லெ’வுக்கு அருகே வைத்தார். அதன் அருகே சில மூங்கில் குச்சிகளையும் காண முடிந்தது. முதலில் அது பனியுடன் விளையாட ஆர்வம் இல்லாதது போன்று இருந்தது. சிறிது நேரம் கழித்து அவ்வாளியிலிருந்த பனியைக் கீழே கொட்டி அதில் புரண்டு விளையாடுவதை அக்காணொளியில் காண முடிந்தது.