சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் நிலச் சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் குடிநுழைவு நடைமுறைகள் மெதுவடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட வாரயிறுதியை ஒட்டி, கூடுதலானோர் பயணம் செய்வதால் உட்லண்ட்ஸ், துவாஸ் என இரு சோதனைச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் பிப்ரவரி 2ஆம் தேதி தெரிவித்தது.
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இத்தகைய நெரிசல் நிலவும் என்று எதிர்பார்ப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
அண்மையில் ஜனவரி 26 முதல் 28ஆம் தேதி வரையிலான வாரயிறுதியில், இரு சோதனைச்சாவடிகளிலும் தொடர்ந்து கூடுதலான போக்குவரத்து பதிவானது. அந்த காலகட்டத்தில் 1.37 மில்லியனுக்கு மேற்பட்டோர் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் பயணம் செய்தனர். அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 458,000 பயணிகள் சென்றுவந்தனர்.
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய வாரயிறுதியில் பதிவான ஒரு நாளுக்கு 402,000 பயணிகள் என்ற அளவைவிட இது 14 விழுக்காடு அதிகம்.
சீனப் புத்தாண்டின்போது காரில் பயணம் செய்வோர், குடிநுழைவுச் சோதனையை நிறைவுசெய்ய மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
வாகனமோட்டிகள் நிலச் சோதனைச்சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டபின் பயணத்துக்குத் திட்டமிடுவது நல்லது என்று அது ஆலோசனை கூறியது.
போக்குவரத்து நிலவரத் தகவல்களுக்கு, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன்மோட்டாரிங்’ இணையத்தளம் அல்லது புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலும் நிறுவப்பட்டுள்ள விரைவுச்சாலைக் கண்காணிப்பு, ஆலோசனைக் கட்டமைப்பை நாடலாம்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும், அதன் ஃபேஸ்புக், எக்ஸ் தளங்கள் வாயிலாக போக்குவரத்துத் தகவல்களை வெளியிடும். மேலும் ஒன் 91.3, கிஸ்92, ஹாவ் 96.3, யூஎஃப்எம் 100.3 ஆகிய வானொலிகளிலும் இந்தத் தகவல்கள் ஒலிபரப்பப்படும்.
வாகனமோட்டிகள் அவர்களின் வாகன நுழைவு அனுமதிச் சான்றிதழ் (விஇபி) காலாவதியாகவில்லை என்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இனி சோதனைச்சாவடிகளில் அந்த அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதை ஆணையம் நினைவுபடுத்தியது.
வரிசையில் காத்திருப்போரை முந்திச் செல்லும் வாகனமோட்டிகள் திருப்பி அனுப்பப்படுவர் என்று ஆணையம் எச்சரித்தது.
பயணிகள் தடைசெய்யப்பட்ட பொருள்களை சிங்கப்பூருக்குக் கொண்டுவர வேண்டாமென்று நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தகைய பொருள்களின் பட்டியலை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையத்தளத்தில் காணலாம்.