இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை 14,707 வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) ஏலக்குத்தகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முந்திய மூன்று மாதங்களைக் காட்டிலும் இது 2.2 விழுக்காடு அதிகம்.
ஏலக்குத்தகைக்கு விடப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 29ஆம் தேதியன்று வெளியிட்டது.
அடுத்த மூன்று மாதங்களுக்குச் சிறிய வகை கார்களுக்கான பிரிவின்கீழ் 5,609 சிஓஇ ஏலக்குத்தகைக்கு விடப்படும் என்று ஆணையம் கூறியது.
இதற்கு முன்பு ஏலக்குத்தகைக்கு விடப்பட்ட சான்றிதழ்களைவிட இது 1.7 விழுக்காடு அதிகம்.
பெரிய வகை கார்களுக்கான பிரிவின்கீழ் கூடுதலாக 2.5 விழுக்காடு சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரிவின்கீழ் 3,895 சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்படும்.
சரக்கு வாகனங்கள் பிரிவின்கீழ் ஏலக்குத்தகைக்கு விடப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை 1,129லிருந்து 1,170ஆக உயர்த்தப்படும்.
மோட்டார்சைக்கிள் பிரிவின்கீழ் ஏலக்குத்தகைக்கு விடப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இப்பிரிவின்கீழ் 3,105 சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்படும்.
நவம்பர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரை மோட்டார் சைக்கிள் பிரிவின்கீழ் இதே அளவு சான்றிதழ்கள் ஏலக்குத்தகைக்கு விடப்பட்டன.