வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை கடந்த ஆண்டு 4.9 விழுக்காடு உயர்ந்தது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான ஆண்டு அடிப்படையிலான விலை அதிகரிப்பு.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு, 2019ஆம் ஆண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை ஆண்டு அடிப்படையில் 0.1 விழுக்காடு ஏற்றம் கண்டது.
2022ஆம் ஆண்டில் அந்த விலை 10.4 விழுக்காடு உயர்ந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு வீவக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரிப்பு 50 விழுக்காட்டுக்கும் குறைவு.
சொத்து விலை அதிகரிப்பு மெதுவடைந்திருப்பதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 12.7 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
வீடுகளுக்கான தேவை குறைந்ததாலும் வட்டி விகிதம் உயர்ந்ததாலும் பணவீக்கம் குறித்த அக்கறை மேலோங்கி இருந்ததாலும் கடந்த ஆண்டு வீவக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரிப்பு மெதுவடைந்தது என்று ஆரஞ்சுடீ சொத்து முகவையின் தலைமை ஆய்வாளரும் உத்தியாளருமான கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்கியவர்களில் மிகச் சிலரே விலைமதிப்புக்கு மேல் கைக்காசு கொடுத்து வீடு வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் மட்டுமே இவ்வாறு செய்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 30 விழுக்காடு குறைவு.
கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளின் சராசரி விலை 14 வீவக குடியிருப்புப் பேட்டைகளில் உயர்ந்ததை திருவாட்டி சன் சுட்டினார்.
மூன்றாவது காலாண்டில் 16 வீவக குடியிருப்புப் பேட்டைகளில் வீவக மறுவிற்பனை வீடுகளின் சராசரி விலை ஏற்றம் கண்டிருந்தது.
கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் நான்கறை வீடுகளின் விலை 0.7 விழுக்காடு உயர்ந்தது.
மூவறை மற்றும் ஐந்தறை வீடுகளின் விலை 0.6 விழுக்காடு அதிகரித்தது.
எக்சிக்யூட்டிவ் வீடுகளின் விலை 0.3 விழுக்காடும் ஈரறை வீடுகளின் விலை 0.1 விழுக்காடும் உயர்ந்ததாக திருவாட்டி சன் கூறினார்.
கடந்த ஆண்டு பொங்கோல் வட்டாரத்தில் ஆக அதிகமான வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறியதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து முகவையின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் லீ சீ டெக் கூறினார்.
அவ்வட்டாரத்தில் 2,000க்கும் அதிகமான மறுவிற்பனை வீடுகள் கைமாறியதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு அடுத்தபடியாக, உட்லண்ட்ஸ், செங்காங், ஈசூன், தெம்பனிஸ் ஆகிய வட்டாரங்களில் ஆக அதிகமான மறுவிற்பனை வீடுகள் கைமாறியதாக அவர் கூறினார்.