கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை கடந்த ஆண்டு (2023) 7.5 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த டிசம்பர் மாதம், கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றம் கண்டது.
இந்தத் தகவலைச் சொத்து இணைய வாசல்களான 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ், ஜனவரி 25ஆம் தேதியன்று தெரிவித்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த மறுவிற்பனை விலை 0.8 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இது 0.5 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது.
இருப்பினும், ஆண்டிறுதி விடுமுறைக்காலம் என்பதால், எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே குறைவான மறுவிற்பனை வீடுகள் கைமாறின.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த அடிப்படையில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்தது. இதற்கு நகர விளிம்பில் உள்ள வீடுகளும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளும் முக்கிய காரணம் என்று ஆரஞ்சுடீ குழுமத்தின் ஆய்வு, வியூகப் பிரிவின் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சுன் கூறினார்.
ஆக அண்மையில் கட்டப்பட்ட கூட்டுரிமை வீடுகள் இந்த இரண்டு வட்டாரங்களில் உள்ளன என்றும் புதிய வீடுகளின் மறுவிற்பனை விலை மற்ற வீடுகளின் மறுவிற்பனை விலையைவிட அதிகமாக இருப்பது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
நகர விளிம்பில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் ஒட்டுமொத்த விலை 8.3 விழுக்காடு உயர்ந்ததாகவும் புறநகர்ப் பகுதியில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை 8.2 விழுக்காடு ஏற்றம் கண்டதாகவும் நகர மையத்தில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை 4 விழுக்காடு அதிகரித்ததாகவும் தரவுகள் காட்டுகின்றன.