தோ பாயோவில் இரண்டு வீவக புளோக்குகளில் வாடகைக்குக் குடியிருந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய இடத்துக்கு மாறியுள்ளன.
பழைய குடியிருப்புப் பேட்டைகளை மறுபடியும் மேம்படுத்தி புதிய வீடுகளையும் புதிய வசதிகளையும் ஏற்படுத்தும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்(வீவக) பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது.
தோ பாயோ லோரோங் 5ல் உள்ள புளோக் 29 மற்றும் 31ல் வாடகைக்கு இருந்த 414 குடும்பங்களை வேறொரு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கை 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
வாடகைக்கு இருந்த கடைசிக் குடும்பம், 2023ஆம் ஆண்டு மே மாதம் பழைய வீட்டிலிருந்து வெளியேறியது என்று 21ஆம் தேதி ஜனவரி 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வீவக தெரிவித்தது.
மொத்த குடும்பங்களில் பாதி, தோ பாயோவிலேயே வாடகை வீட்டைத் தேர்ந்தெடுத்து குடியேறியுள்ளன.
இதர 22 விழுக்காட்டு குடும்பங்கள் அருகில் பிடடாரி வட்டாரத்தில் புதிய தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளுக்கு மாறியுள்ளன. மற்ற 20 விழுக்காட்டு குடும்பங்கள் இதர நகரங்களில் உள்ள வாடகை வீடுகளில் குடியேறியுள்ளன.
எஞ்சிய குடும்பங்கள் புதிய வீட்டை வாங்கியிருக்கலாம் அல்லது வாடகை வீடுகள் தேவைப்படாமல் இருந்திருக்கலாம் என்று கழகம் தெரிவித்தது.
தோ பாயோவில் வாடகை வீடுகளைக் கொண்ட இரண்டு புளோக்குகளும் நகரச் சீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டத்தின்கீழ் குடியிருப்புக்குப் பயன்படுத்தும் இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது, தற்போதைய 11 மாடிகளுக்குப் பதிலாக இதே இடத்தில் உயரமான புளோக்குகளைக் கட்ட அனுமதிக்கிறது.
இந்த இரு புளோக்குகளுக்குப் பக்கத்தில் ஏற்கெனவே 36 மாடி உயர வீவக புளோக்குகள் 2018ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
தோ பாயோவின் பிரபல அடையாளங்களில் ஒன்றான கடல்நாக விளையாட்டுத் திடலுக்குப் பின்புறத்தில் உள்ள இரண்டு புளோக்குகளும் விரைவில் இடிக்கப்படும்.
புதிய இடத்துக்கு மாறிய வாடகை வீட்டுக்காரர்களில் ஓய்வு பெற்ற டாக்சி ஓட்டுநரான ஆங் டியாவ் ஹோங்கும், 84, ஒருவர். இவர், பராமரிப்பு குறைவான புதிய வீட்டை விரும்பியதால் மனைவியுடன் பிடடாரியில் உள்ள ஈரறை வீட்டைத் தேர்ந்தெடுத்து குடியேறியுள்ளார்.
“எனக்கு தோ பாயோவில் இருக்க ரொம்பப் பிடிக்கும். ஆனால் எல்லாமே பழைய வீடுகளாக இருக்கின்றன. மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன. அவையெல்லாம் பழுதுபார்க்கப்பட வேண்டியுள்ளது. பிடடாரியில், கழிப்பறை குழாய்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் அனைத்தும் புதியவை,” என்று திரு ஆங் கூறினார்.
தோ பாயோவில் வசித்தபோது திரு ஆங் $44 வெள்ளியை வாடகைக் கட்டணமாக செலுத்தி வந்தார். தற்போது அவர் மாதம் $50 வெள்ளி வாடகை கொடுத்து வருகிறார்.
“ஒரே ஒரு பிரச்சினை உணவு. அருகில் உள்ள கடைத் தொகுதிகளில் உணவு விலைகள் அதிகமாக உள்ளது. இதனால் மூன்று பேருந்துகளில் ஒன்றையெடுத்து தோ பாயோவுக்குச் சென்று சாப்பிடுகிறேன்,” என்று திரு ஆங் தெரிவித்தார்.
புதிய இடத்துக்கு மாறுவதற்கான செலவைக் குறைப்பதற்காக வாடகைதாரர்களுக்கு $2,500 வெள்ளி படித்தொகை வழங்கப்பட்டதாக கழகம் தெரிவித்தது. தூரத்தில் உள்ள மற்ற நகரங்களில் இடம் மாறிய குடும்பங்களுக்கு கூடுதலாக $2,500 வெள்ளி கொடுக்கப்பட்டது.
முதல் முறையாக வீடு வாங்கத் தயாராக இருந்த தகுதி பெற்ற குடும்பங்களுக்கு வீட்டு மானியத்துடன் இடம் மாறும் மானியமாக மேலும் $15,000 வழங்கப்பட்டது.
கடந்த 2021 ஜூலையில் இடம் மாற வேண்டிய அவசியம் குறித்து வாடகை குடியிருப்பாளர்களுக்கு வீவக அதிகாரிகள் வீடுதோறும் சென்று தெரியப்படுத்தினர். மறுவீட்டில் குடியேறும் வாய்ப்பு மற்றும் நன்மைகளையும் அவர்களுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.