தான் வசித்த கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின்கீழ் மாண்டுகிடந்த 23 வயது ஆடவரின் மரணம் துரதிர்ஷ்டமாக நிகழ்ந்தது என்று மரண விசாரணை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
அச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. சீனாவைச் சேர்ந்த சாவ் மிங்ஜியென் எனும் ஆடவர் கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின் 15வது தளத்திலிருந்து விழுந்து மாண்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் (என்யுஎஸ்) பட்டக் கல்வி முடித்திருந்த அவர், அப்போதுதான் புதிதாக வேலையில் சேர்ந்திருந்தார்.
தனது மகன் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என்று தான் நம்புவதாக திரு சாவின் தாயார் நீதிமன்ற விசாரணையின்போது கூறினார். மகனின் இறுதிச் சடங்கின்போது அவரின் நண்பர்கள் வெளியிட்டதாக நம்பப்படும் சில முரண்பாடான கருத்துகளை அவரின் தாய் குறிப்பிட்டுப் பேசினார்.
தனது மகன் வீட்டின் ‘பால்கனி’ பகுதியிலிருந்து விழுந்தபோது அங்கு இரு மர்ம நபர்கள் காணப்பட்டதாகச் சொல்லப்பட்டது; அது குறித்தும் திரு சாவின் தாய் பேசினார்.
எனினும், திரு சாவின் மரணத்தில் பிறர் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று மரண விசாரணை அதிகாரியான ஆடம் நக்கோடா 12ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்தது.