வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த 52 வயது ஸாங் சியுசியாங் என்ற சீன நாட்டவருக்கு, அந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளிடம் திருடியதற்காக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 12) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை ‘சற்று கடுமையானது’ என்று ஸாங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வியட்னாமின் ஹோ சிமின் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் TR305 பயணத்தின்போது இத்திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியதும் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுத்துச்செல்ல தயாரானபோது பயணிகளில் சிலர் தங்கள் கைப்பைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போய்விட்டது என்று விமானச் சிப்பந்திகளிடம் கூறினர்.
தென்னாப்பிரிக்காவின் 62 வயது மாதான கிரஹாம் வல்மை ஹோப், இருக்கை 11Bயில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஸாங் 11Cயில் அமர்ந்திருந்தார்.
பயணத்தின்போது, ஸாங் இருக்கைகளுக்கு நடுவில் உள்ள பாதையில் நடந்து இருக்கை 7Eக்கு மேல் உள்ள பொருள் வைக்கும் பெட்டகத்திலிருந்து கருமை நிறப் பையை எடுப்பதை திருவாட்டி ஹோப் பார்த்திருக்கிறார்.
பையை எடுத்துக்கொண்டு ஸாங், தனது இருக்கைக்குத் திரும்பி பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து தனது சட்டைக்குள் வைத்த பின்னர், பையை பெட்டகத்தில் வைத்தார்.
விமானம் தரையிறங்கியதும் 29 வயது கொரிய நாட்டவர் ஸாங் முன்னர் ஏதோ ஒன்றை எடுத்த அதே சாம்பல் நிறப் பையைக் கையில் எடுப்பதை திருவாட்டி ஹோப் பார்த்தார்.
அப்போது திருவாட்டி ஹோப், தனது பையில் ஏதாவது காணாமல் போயிருக்கிறதா என்று பார்க்கும்படி அந்த கொரிய நாட்டவரிடம் கூறினார். அப்போதுதான் அந்தப் பையில் ஒரு கடித உறையில் அவர் வைத்திருந்த US$1,000 மற்றும் S$930 ரொக்கம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
அந்தப் பணத்தை ஸாங் எடுத்திருக்கக்கூடும் என்று திருவாட்டி ஹோப் கொரிய நாட்டவரிடம் கூறினார். இத்தருணத்தில் ஸாங் தனது இருக்கையை விட்டு எழுந்து விமானத்தை விட்டு வெளியே செல்ல காத்துக்கொண்டிருந்தார்.
இந்த உரையாடலை செவிமடுத்த 60 வயது சிங்கப்பூரரான ரிச்சர்ட் கூ ஹை கூன், ஸாங் விமானத்தை விட்டு அவசரமாக வெளியேற முயன்றதைப் பார்த்தார். ஸாங் வெளியேறுவதை திரு ரிச்சர்ட் தடுக்க முயன்றபோது, ஸாங் அந்த கடித உறையை இருக்கை 7Dயில் போட்டதையும் பார்த்தார்.
பாதிக்கப்பட்டவர் அந்தக் கடித உறையை எடுத்து அதிலிருந்து பணத்தை எண்ணியபோது, தாம் வைத்திருந்த பணத்துடன் அது ஒத்திருந்தது. இந்த சலசலப்பைப் பார்த்துக்கொண்டிருந்த மேலும் இரு பயணிகள் தங்கள் பைகளைச் சோதித்துப் பார்த்தபோது அவரின் பணமும் களவாடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரின் S$50யும் 5.16 மில்லியன் வியட்மானிய பணமும் (S$210) காணமல் போயிருந்தது. இந்தத் தொகை, ஸாங்கின் வாக்குமூலத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி முன்னதாக S$50, 510 மில்லியன் வியட்மானிய பணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் குற்றப் பத்திரிகையில் திருடப்பட்ட தொகையின் அளவு மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட மூன்றாம் நபர் S$600யும் மூன்று மில்லியன் வியட்னாமிய பணத்தையும் இழந்திருந்தார். தனது குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததும் ஸாங் தான் திருடிய பணத்தை விமானத்தின் தரையில் வீசி எறிந்ததாக மற்றொரு பயணி கூறினார். சாட்சியத்தை அழிக்க ஸாங் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருட்டுச் சம்பவம் பற்றி அறிந்த விமானி, காவல்துறையின் உதவியை நாட, ஸாங் கைது செய்யப்பட்டார். திருடியதைப் பார்த்த சாட்சிகள் இருந்தும், தான் திருடவில்லை என்று ஸாங் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
மூன்று பயணிகளிடம் திருடப்பட்ட பணம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது.
மாவட்ட நீதிபதி ஓங் லுவான் ஸி, ஸாங்குக்கு எதிரான தண்டனையை வாசித்தவுடன், அதை உரைபெயர்ப்பாளர் மூலம் ஸாங்குக்கு மாண்டரின் மொழியில் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட ஸாங், இந்த தண்டனை சற்று கடுமையானது என்று மாண்டரின் மொழியில் கூறினார். அதைக் கேட்ட நீதிபதி, இது தன்னுடைய தண்டனை விதிப்பு என்றும் ஸாங்குக்கு வேண்டுமானால் அவர் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்று சொன்னார்.
திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.