தொழிற்திறன்களைத் தாண்டி, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடன் பயன்படுத்தப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது.
அத்துடன், மாணவர்களின் வயதுக்கேற்றவாறு இதைப் பள்ளிகள் அவர்களுக்குக் கொண்டு செல்லும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
“தொழில் அடிப்படையுடன் நெறிமுறை சார்ந்த அடிப்படையிலும் நாங்கள் செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்,” என்று அவர் விளக்கமளித்தார்.
இதில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சாதக பாதகங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதியன்று பேசிய திரு சான், செயற்கை நுண்ணறிவுப் பாடம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படலாம் என்றார்.
அதுபோல், உயர்நிலை மாணவர்களுக்குப் படைப்பாற்றல் வடிவில் செயற்கை நுண்ணறிவை தங்கள் பாடத்திட்ட வடிவமைப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திரு சான் தெளிவுபடுத்தினார்.
செயற்கை நுண்ணறிவை வேலையிடத்துக்குப் பயன்படுத்துவது, பொய்ச் செய்தியை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது, செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வியைத் தரநிலைப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மன்ற உறுப்பினர்கள் ஐவர் கேட்ட கேள்விகளுக்கு திரு சான் பதிலளித்தார்.