செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஏமன் நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துலக கடல்துறை பாதுகாப்புப் படைக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களை அனுப்பி பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆப்பரேஷன் புரோஸ்பரிட்டி கார்டியன்’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தகவல் இணைவு மையத்தின் குழுவினர் அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் தகவல் பரிமாற்றத்திலும் செயல்பாட்டுத் திட்டத்திலும் அனைத்துலக படைக்கு உதவுவார்கள் என்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) நாடாளுமன்றக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் விளக்கினார்.
குடியரசின் மூத்த தேசிய பிரதிநிதி ஒருவர், பஹ்ரேனைத் தலைமையகமாகக் கொண்ட 39 நாடுகள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைந்த கடல்துறை படையில் பணியாற்றுவார் என்றும் டாக்டர் இங் சொன்னார்.
கப்பல் தாக்குதல்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் என்றாலும் அது சிங்கப்பூர் மீது கொண்டிருக்கும் தாக்கம் குறைவாகவே இருக்கும். காரணம், குடியரசின் பெரும்பாலான முக்கிய உணவுப் பொருள்களும் மருந்துப் பொருள்களும் விமானம் வழியாக இங்கு வந்து சேர்கின்றன என்றும் அமைச்சர் இங் விவரித்தார்.