கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 டிசம்பர்) தனது நண்பர்களைச் சந்திக்கச் சென்றார் சிங்கப்பூரின் மூவகைப் போட்டி விளையாட்டு வீராங்கனை சூ லிங் எர்.
அன்று அதிகாலை 5.10 மணியளவில் சிமெய் அவென்யூவில் நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் சிக்கினார். தனது நண்பர்களுடன் ஒன்றாக சைக்கிளோட்டத்தில் ஈடுபட 36 வயது சூ சைக்கிளில் அவ்வழியே சென்றுகொண்டிருந்தார்.
அப்பொழுது பின்னால் இருந்த ஒரு கார் தன்மீது மோதியதால் தனது முதுகெலும்பு முறிந்ததாக சூ இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
தனது ‘எல்3 லம்பார் வெர்ட்டிப்ரே’ எலும்பை முறித்துக்கொண்டதைக் காட்டிலும் தனது ஒன்றரை வயது மகளான கைராவை ஓரிரு மாதங்களுக்குத் தூக்க முடியாததே கூடுதல் வேதனை தருவதாக அவர் கூறினார். சூ, சில காலத்துக்கு கனமான பொருள்களையும் தூக்கக்கூடாது.
கீழ் முதுகெலும்பில் ஏற்பட்ட முறிவு தானாகவே குணமடைய நீச்சல், சைக்கிளோட்டம், சாலையோட்டம் ஆகிய நடவடிக்கைகளில் குறைந்தது ஒரு மாதத்துக்கு அவர் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். சூவிற்கு ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து அவரது கணவர் ஆலன் சோ வருத்தம் தெரிவித்தார்.
“அவர் தாயாக இருந்து எங்களின் மகளைத் தூக்க முடியாதது மிகுந்த வருத்தம் தரும் ஒன்று. இது ஒரு தாயின் ஏக்கம். தாயாக இருந்து எங்களின் ஒன்றரை வயது மகளைத் தூக்க முடியாமல் இருப்பது அவரை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது,” என்றார் 35 வயது சோ.
உலகளவில் போட்டித் தரக்கூடிய ஆற்றலைக் கொண்ட சூ, தான் அடிக்கடி ஈடுபடும் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்வது அவருக்கு மனதளவில் சிரமமாக உள்ளது என்று முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரரான சோ குறிப்பிட்டார்.