நியூயார்க்: காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்துக்கு சிங்கப்பூர் ஆதரவு அளித்துள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட 153 நாடுகள் போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு முன்னரும் ஐநாவின் பாதுகாப்பு மன்றம் கொண்டுவந்த இதேபோன்ற தீர்மானத்துக்கும் சிங்கப்பூர் ஆதரவு தெரிவித்திருந்தது.
காஸா மீது நடக்கும் தொடர் தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வரும் பொதுமக்கள் உயிரிழப்புகளும் சிங்கப்பூருக்கு ஆழ்ந்த கவலையைத் தந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
போர்நிறுத்தம் மூலம் காஸா மக்களுக்கு வேண்டிய உடனடி அத்தியாவசிய உதவிகள் வழங்க முடியும் என்றார் அவர்.
அனைவரும் அனைத்துலக சட்டங்களையும், மனிதாபிமான சட்டங்களையும் மதித்து நடப்பதை சிங்கப்பூர் விரும்புவதாக அமைச்சர் விவியன் தெரிவித்தார்.