ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பதின்ம வயது இளையர் மேலும் ஒரு சீர்திருத்தப் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று வியாழக்கிழமையன்று உத்தரவிடப்பட்டது.
அச்சம்பவம் இவ்வாண்டு மார்ச் மாதம் ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் நிகழ்ந்தது. அதில் இருவர் காயமுற்றனர்.
சம்பந்தப்பட்ட 19 வயது இந்தோனீசிய இளையரின் பெயரை வெளியிட அனுமதி இல்லை. புதிய உத்தரவின்படி அவர் குறைந்தது ஓராண்டுக்கு சீர்திருத்த நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
அங்கு அவர் உடல்ரீதியான நடவடிக்கைகள், மனநல ஆலோசனை போன்றவற்றை மேற்கொள்ளேவேண்டும்.
தன்மீது சுமத்தப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுகளை இவ்வாண்டு அக்டோபர் மாதம் இளையர் ஒப்புக்கொண்டார். பிறரைத் தாக்கியது, உரிமமின்றி மோட்டார்சைக்கிளை ஓட்டியது, சட்டவிரோத ஒன்றுகூடலில் ஈடுபட்டது போன்றவற்றின் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் இளையர்மீது சுமத்தப்பட்டிருந்தன.
18 மாதங்களுக்கு எல்லா வகை வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கவோ அவற்றை வைத்திருக்கவோ புதன்கிழமையன்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
வேறொரு சம்பவத்துக்காக இளையர் ஏற்கெனவே ஒருமுறை சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்று சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது. விடுவிக்கப்பட்ட பிறகு இளையரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவரின் உடலில் மின்சாரத்தில் இயங்கும் கண்காணிப்புப் கருவி ஒன்று பொருத்தப்பட்டது.
பின்னர் அதையும் மீறி 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குற்றம் புரிந்த பிறகு அன்றைய தினம் அவர் கண்காணிப்புக் கருவியைக் கழற்றியிருக்கிறார்.
மறுநாள் இளையர் கைது செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளையர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு சரணடையத் தவறியதால் அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் அவர் ஈடுபட்டார்.