சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தின் (ஆர்டிசி) கட்டடங்களைச் சுற்றியுள்ள சுவர்களில் கடற்கரையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பதைப் போன்ற சுவரோவியங்கள் உள்ளன.
நான்கு மாடிகள் உள்ள தானா மேரா சிறைச்சாலைக் கட்டடத்தில் கலங்கரை விளக்கத்தின் ஓவியம், மணலில் நிறைய நட்சத்திர வடிவிலான மீன்கள் இருப்பதைப் போன்று சித்திரிக்கப்பட்ட ஓவியம் போன்றவற்றை காண முடியும்.
அந்த ஓவியத்தில் உள்ள நட்சத்திர வடிவிலான மீன்கள் சீர்திருத்தப் பயிற்சி பெறுபவர்களைக் குறிக்கிறது எனச் சீர்திருத்தப் பிரிவைச் சேர்ந்த பணியாளரான சார்ஜண்ட் பெஞ்சமின் ரிச்சர்ட் பெரேரா கூறினார்.
மணலில் சிக்கித் தவிக்கும் நட்சத்திர வடிவிலான மீனைக் காப்பாற்றிக் கடலுக்குத் திருப்பி அனுப்புவது போன்று பயிற்சியாளர்கள் சீர்திருத்தத்திற்கு வருபவர்களை மீட்டு மீண்டும் சமூகத்திற்கு உதவுகிறார்கள் என்றார் அவர்.
“இந்தச் சுவரோவியங்களைப் பார்க்கும்பொழுது, சீர்திருத்த நிலையங்களுக்கு வருபவர்கள் நிம்மதியாக உணர வைக்க வேண்டும். அவர்கள் இங்கு இருக்கும் காலம் அவர்களுக்குக் கடுமையாக தெரியக்கூடாது,” என்று அவர் மேலும் சொன்னார்.
இளம் குற்றவாளிகளின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்கான திறன்களைக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கான ஆலோசனை, ஒழுக்கத்தைக் கற்பிப்பது போன்ற பாடங்கள் அவர்களுக்கு நடத்தப்படும்.
ஆனால், சீர்திருத்தப் பயிற்சி நிலையங்களுக்கு வரும் 14 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய இளம் குற்றவாளிகளில் சிலர் தங்களுடன் அதே கட்டடத்தில் இருக்கும் சக குற்றவாளிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.